என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து ‘சார்… நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?’ என தழுதழுத்த குரல் கேட்டது. அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது.
ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கு என் குருநாதர் படுக்கையில். அருகில் சென்றேன், என்னைப் பார்த்தவர் எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தார். ‘சார்… எப்படி இருக்கீங்க?’ என்றேன். அவர் குழந்தையைப்போல மலங்க மலங்க என்னைப் பார்க்க, நான் கலங்கிப்போனேன்.
திரையுலகில் அவர் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் படப்பிடிப்பு அரங்கத்தில் நுழையும்போதே எல்லோரும் நடுங்குவார்கள். அவ்வாறு கர்ஜித்த சிங்கம் இன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்தக் கம்பீரம் எங்கே தொலைந்துபோனது எனத் தேடினேன். அந்த அறையில் இருந்தவர்கள் கே.பி அவர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, ‘ஐயா, இவர் யாருன்னு தெரியுதா… சொல்லுங்க பார்க்கலாம்’ எனக் கேட்டது, அரிச்சுவடியை குழந்தைக்குக் கற்பிக்கும் ஆசிரியர் கேட்பதுபோல இருந்தது. எத்தனையோ தென் இந்தியத் திரைப்படப் பிரபலங்களை ஆட்டுவித்த அந்த ஆளுமை, இன்று ஸ்தம்பித்து நிற்கிறதே என என் மனம் விம்மியது. நான் அவரையே உற்றுப் பார்க்க, பெற்ற பிள்ளை தாயை ‘அம்மா’ என அழைப்பதைபோல் இருந்தது, அவர் என்னைப் பார்த்து ‘ரஜினி’ எனக் கூறியது.
அகில இந்திய அளவில் என்னை ‘ரஜினி’ என அடையாளம் காட்டிய அந்த ஆத்மா தன்னையே இழந்த நிலை கண்டு தடுமாறினேன். எனக்குப் பேச வார்த்தைகள் வர மறுத்தன. மாறாக, கண்ணீர் மட்டும் என் கண்களின் உத்தரவின்றி வழியத் தொடங்கியது. நானும் அவரிடம் விடைபெற்று, நடை தளர்ந்தபடி கடந்த கால நினைவுகளில் கரைந்தேன்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நான் அங்கு இருந்த ஊடகங்களுக்கு, ‘கே.பி சார் எனக்குத் தந்தை போன்றவர்’ எனக் கூறினேன். அது உதட்டளவில் வந்த வார்த்தை அல்ல; என் உள்ளத்தில் இருந்து வந்த உண்மை. ஆம்! இருட்டுப் பாதையில் சென்ற இந்த முரட்டு வாலிபனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வழிகாட்டியவரை, ‘தந்தை’ என்றுதானே கூற முடியும்.
1980-களில் நான் சினிமா மீது வெறுப்புற்று, ‘எனக்கு சினிமாவே வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள்’ எனக் குழம்பித் தவித்தபோது, ‘டேய்… ஆறு மாசம் பொறுமையா இரு. அதுக்கு அப்புறமா சினிமாலே இருக்கிறதா, வேண்டாமானு நீயே முடிவு செஞ்சுக்க’ எனக் கூறி என் தவறான முடிவை அவர் மட்டும் தடுத்திருக்காவிட்டால், என்னுடைய இன்றைய முகவரி என்றோ தொலைந்துபோயிருக்கும். அப்படிப்பட்ட நல்லவரை இந்த நிலைமையில் பார்க்கும் கொடுமையை நினைக்கும்போது, நான் இந்த உலகில் இருந்தும் இல்லாத நிலைபோல எனக்குத் தோன்றியது. அதுதான் உண்மை. யதார்த்தத்துக்கு ஏன் ஒப்பனை? தேவை இல்லை. டாக்டர்கள் கூறிய ‘கே.பி சார் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார். இப்போது நலமாக இருக்கிறார்’ என்ற செய்தி அறிந்து அடைந்த மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்காமல், பின்னாலேயே மரணச் செய்தி வந்தடைந்தது.
உடனே மருத்துவமனைக்குச் சென்று செய்வதறியாது அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரையுலகில் எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணி சாய்ந்துகிடந்தது. என் வேதனையை, துக்கத்தை எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இந்த ‘24.12.2014’-தான் என்னைப் பொறுத்தவரையில் ‘கறுப்பு நாள்’. வீட்டுக்கு வந்த பிறகும் எனக்கு இருப்புகொள்ளவில்லை. அவருடைய இழப்பு எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகத் தோன்றியது.
அவருடைய இறுதிச் சடங்குகள் முடியும் வரை அவரோடு இருக்க விரும்பி, விடிந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றேன். வண்டியைவிட்டு நான் இறங்கக்கூட இல்லை. என்னைக் கூட்ட நெரிசலில் அப்படியே இழுத்துச் சென்றவர்கள், அவர் முகத்தை எனக்குக் காட்டிவிட்டு மீண்டும் என்னை இழுத்துவந்து வண்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.
சரி, மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம் எனக் கிளம்பினேன். இறுதி ஊர்வலம் செல்லும் சாலைகளின் இருமருங்கிலும் அவரைக் காண காத்துக்கிடந்த கூட்டத்தைப் பார்த்து, அங்கு இருந்த அனைவரும் பிரமித்துப்போனார்கள். இப்படிப்பட்ட மக்கள் வெள்ளம் எப்படி வந்தது? எந்த ஒரு சினிமா இயக்குநருக்கும் இல்லாத கூட்டம் இவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியம்? இவரது படைப்புகள் மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்புத்தான் அது. திரையுலகப் பயணத்தில் அவர் சேர்த்த செல்வாக்கின் மதிப்பை, அவரின் இறையுலகப் பயணம்தான் நாம் உணரும்படியும் அதிரும்படியும் செய்தது.
ஈமச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னையும் அறியாமல் என் மனதில் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது… ‘இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவர் எங்கேயோ பிறந்து சென்னை வந்து திரைப்பட இயக்குநர் ஆனது, நான் சென்னை வந்து அவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர் என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படி ஒரு ஸ்தானத்தில் உட்காரவைத்தது… இவை அனைத்தும் திட்டமிட்டுச் செயல்பட்டதால் நடந்த விஷயங்கள் அல்ல. எனக்கும் அவருக்கும் இடையில் அப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டது? இந்தப் பந்தம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாது, எத்தனையோ ஜென்மங்களாகத் தொடர்ந்து வரும் உறவுபோல எனக்குத் தோன்றுகிறது. அவருடைய ஸ்தூல சரீரம்தான் இறந்துகிடக்கிறது. அவரது சூட்சம சரீரம் எனக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதாக நான் உணர்ந்து, என் இரண்டு கைகளையும் கூப்பியபடி உயர்த்தி அவரை வணங்க, ‘சடங்கு முடியப்போகிறது, வாய்க்கரிசி போடுறவங்க போடலாம்’ என்ற குரல் கேட்டது. எனக்கு அன்னம் அளித்த என் ஆசானுக்கு வாய்க்கரிசி போட ஏனோ என் கைகள் நடுங்கின.
‘சடங்கு எல்லாம் முடிஞ்சுபோச்சு. ஒரு சகாப்தத்தை, தீ தனக்கு இரையாக்கிக் கொள்ளப்போகிறதே… கடவுளே! அந்தத் தீயை அணைக்க என் கண்ணீர் போதவில்லையே… நான் என்ன செய்ய?’ என என் தேகம் பதறியது. அந்த அந்திமக் காட்சியை என் கண்கள் காண மறுத்தன. கனத்த இதயத்துடன் திரும்பினேன்.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா!’
– பாடல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
தமிழ் ‘லிங்கா’வுக்குத் திருப்திகரமாக சென்சார் சான்றிதழ் பெற்றவிட்ட சந்தோஷத்தை சில நிமிடங்கள்கூடக் கொண்டாடவில்லை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ‘இந்தி, தெலுங்கு சென்சார் சர்ட்டிஃபிகேட்ஸ் வாங்கணும், டிரெய்லர் கட் பண்ணணும்’ என பரபரப்பாக இருக்கிறார். திடும்மெனத் தொடங்கி, தடதடவெனத் தயாராகிவிட்டது ‘லிங்கா’ எக்ஸ்பிரஸ்!
” ‘பாட்ஷா’ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்த சூழ்நிலையில் ‘முத்து’ படம் இயக்கினீர்கள். அந்தப் படத்தில் அரசியல் டச் வசனங்கள் இருந்தன. இப்போ ‘லிங்கா’ வெளியாகும் சமயம் திரும்பவும் ரஜினியைச் சுற்றி அரசியல் சர்ச்சை. இது திட்டமிட்ட பப்ளிசிட்டினு ஒரு பேச்சு ஓடுதே…”
”நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்லதான் பார்ப்பாங்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே. தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி சார் என்னைக்கும் இருந்தது இல்லை. ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’னு அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!”
” ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா திடீர்னு அரசியல் மேடை ஆனது ஏன்?”
”முதல்ல ‘லிங்கா’ படத்தைப் பத்தி மட்டும்தான் எல்லாரும் பேசினாங்க. அமீர் பேச்சுதான் அரசியல் பக்கம் எல்லாரையும் திருப்பிருச்சு. ஆனா, ரஜினி சார் அப்பவும் அரசியல் பத்தி எதுவுமே பேசலையே. ‘அரசியல் எனக்கும் தெரியும்’னு மட்டும்தான் சொன்னார். ‘அரசியலில் இறங்கப்போறேன்’னு எந்த உத்தரவாதமும் கொடுக்கலை!”
”அரசியல் ஆர்வம் இல்லைன்னா, இமயமலைக்குப் போவாரா?”
”இல்லை. இனிமேல் ரஜினி சார் இமயமலைக்குப் போக மாட்டார். அப்படியே ஏதோ ஒரு மாற்றம் விரும்பி போனாலும், ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் போவாரே தவிர, சாமியார் மனநிலையில போக மாட்டார்!”
” ‘படையப்பா’வில் ‘என் வழி தனி வழி’ பன்ச் டயலாக் பட ரிலீஸ் வரை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டீங்க. ‘லிங்கா’வில் அப்படி என்ன சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க?”
”இந்தப் படத்தில் அப்படி ஒரு தொடர் டயலாக் இடம் பெறலை. ஆனா, ‘லிங்கா’ பட சீன்களில் ஆங்காங்கே அசத்தலான பன்ச் இருக்கும். ‘லிங்கா’வுக்காக ரஜினி சார் வித்தியாசமான ஒரு ஸ்டைல் முயற்சி பண்ணியிருக்கார். அது மட்டும் படத்துல அடிக்கடி ரிப்பீட் ஆகும்!”
”படப்பிடிப்பில் எல்லாரையும் கடுமையாத் திட்டி வேலை வாங்குவீங்கனு சொல்றாங்க. அதுக்காக ரஜினி உங்ககிட்ட எதுவும் சொன்னது இல்லையா?”
”2,000 பேர் மத்தியில் ரஜினி சார் நின்னுட்டு வசனம் பேசுற பிரமாண்ட காட்சியைப் படம் பிடிக்கணும்; அணையின் உச்சியில் நின்னு ரஜினி சார் வசனம் பேசணும்; அவ்ளோ உயரத்துக்கு ஏறிப் போறதுக்கே 20 நிமிடங்கள் ஆச்சு. உச்சி வெயில். உயரத்தில் நிற்கிறார் ரஜினி. அணையைச் சுத்தி 2,000 பேரும் பரவி நிக்கணும். ஒவ்வொரு பகுதி ஆளுங்களையும் கத்திக் கத்தி ஒழுங்குபடுத்துறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திருச்சு. ஆனாலும் திருப்தி இல்லை. அப்புறம் வேற வழியில்லாம காரசாரமாத் திட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் விறுவிறு, சுறுசுறுனு வேலை நடந்துச்சு. எல்லாத்தையும் அணை மேல இருந்து ரஜினி பார்த்துட்டே இருந்தார். அதுக்கு முன்னாடி அவர் ஸ்பாட்ல இருக்கிறப்ப நான் அப்படிப் பேசினதே இல்லை. அந்த ஷாட் எடுத்து முடிச்சதும் என் பக்கத்துல வந்த ரஜினி, ‘ரவி… இப்போ எடுத்த சீனை மானிட்டர்ல பார்க்கலாமா?’னு கேட்டார். அவருக்கு பிளே பண்ணோம். பார்த்துட்டு அசந்துட்டார். ‘வாவ்… ஃபென்டாஸ்டிக். நீங்க அப்படித் திட்டினப்போ எனக்கே ஒருமாதிரி இருந்தது. ஆனா, இப்படியொரு பிரமாண்ட காட்சியைப் பார்த்த பிறகு, நீங்க கடுமையா திட்டுனதுல தப்பே இல்லை’னு சொன்னார். ரஜினி சார் உடம்பு சரியில்லாமப் போய் திரும்ப மீண்டு வந்து நடிக்கிறப்ப, அவருக்கு சின்னக் கஷ்டம்கூடக் கொடுக்கக் கூடாதுனு நான் தவிச்சேன். அதனாலதான் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் அப்படி நடந்துக்க வேண்டியதாயிருச்சு!”
”இப்போ ரஜினி எப்படி இருக்கார்?”
” சூப்பரா இருக்கார். ‘படையப்பா’ படப்பிடிப்புக்கு காலையில 7 மணிக்கே ஸ்பாட்ல வந்து நிப்பார். ஆனா, ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு 10 மணிக்கு வந்தா போதும்னு நான் கறாரா சொல்லியிருந்தேன். ஆனாலும் 9 மணிக்கே வந்துடுவார். இருந்தாலும் நான் 10 மணிக்கு மேலதான் அவருக்கு ஷாட் வைப்பேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்க நேரம் கொடுத்துருவேன். இப்படி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும்தான் அவரை நடிக்கவெச்சோம். ஏன்னா, ரஜினி சார் மேல அவர் குடும்பத்தினருக்கு இருக்கிற அக்கறை, எனக்கும் இருக்கு.
பொதுவா ஒரு ஹீரோவுடன் ஒரு இயக்குநர் வேலைபார்க்கும்போது மட்டுமே நெருக்கமா இருப்பார். அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில் இடைவெளி விழுந்திரும். ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் எப்பவும் அப்படி ஒரு இடைவெளி விழுந்ததே இல்லை. கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி அவரை வெச்சு ‘முத்து’ இயக்கினேன். அப்புறம் ‘படையப்பா’ பண்ணோம். ரெண்டுமே சூப்பர் ஹிட்.
அப்புறம் ‘ஜக்குபாய்’க்கு பூஜை போட்டோம். விளம்பரம் கொடுத்தோம். ஆனா, திடீர்னு படம் டிராப் ஆகிருச்சு. இடையில கமல் சாரை வெச்சு சொந்தப் படம் பண்ணேன். அப்போ ரஜினி சார் அடிக்கடி என் ஆபீஸுக்கு வருவார். அவர்தான் கமல் படத்துக்கு ‘தெனாலி’னு பேர் வெச்சார். அப்புறம் ‘ராணா’ படம் ஆரம்பிச்சேன். அதுக்கு ரெண்டு பாடல்கள் ரிக்கார்டிங் பண்ணிக் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போதான் ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அந்தப் படமும் டிராப். ரெண்டு சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு, ரெண்டு புராஜெக்ட் டிராப் ஆச்சுன்னா, பொதுவா ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் சின்னக் கருத்து வேறுபாடு இருக்கும்ல. ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் அதுக்கு அப்புறம்தான் அன்பும் நட்பும் ஜாஸ்தி ஆச்சு. அந்த அளவுக்கு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுவெச்சிருக்கோம். அந்தப் புரிதல்தான் ‘லிங்கா’ங்கிற மெகா புராஜெக்டை ஆறே மாசத்தில் முடிக்கவெச்சிருக்கு!”
இதோ காத்திருக்கிறது வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்!’ ‘‘சமயங்களில் படைப்பு நாம் நினைச்சதைவிடவும் நல்லா வரும். உடலும், உணர்வுமாக என்னுடைய அதிகபட்ச உழைப்பைப் பதிவு செய்திருக்கேன்.
போன படத்தில் கிடைச்சது நல்ல அனுபவம். நான் இப்ப எது மேலேயும் நம்பிக்கை வைக்கிறதில்லை. வெள்ளிக்கிழமை ஒரு மணிக்கு என்ன ரிசல்ட்டோ அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ‘ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது’ என்பது புதுமொழி!’’ – நிதர்சனமும் நிதானமுமாகப் பேசுகிறார் டைரக்டர் வசந்தபாலன். தமிழின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.
‘‘ ‘காவியத்தலைவன்’ ஒரு புது அனுபவம் தருகிற படைப்பாக இருக்கும் எனப் பேசப்படுகிறது…’’‘‘ரொம்ப நாட்களுக்குப் பிறகு நல்ல நடிப்பைப் பார்க்கலாம். இது ஆக்டிங் ஸ்கூல் பத்தின படமும் கூட. சித்தார்த், நாசர், பிருத்விராஜ் மூணு பேரும் அவங்களோட அதி அற்புத நடிப்பைத் தந்திருக்காங்க.
மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் உங்க கை விரலைப் பிடிச்சுக்கிட்டு கதை சொல்லிட்டுப் போற மாதிரி யோசிக்க விடாமல் படம் போகுது. எப்பவும் ‘செல்’லை நோண்டிக்கிட்டு இருக்கிற ஒரு மோசமான தலைமுறைக்கு இந்தக் கதையைச் சொல்ல முயற்சி எடுத்திருக்கேன்…
நம்பிக்கையோடு இருக்கேன். ஒரு ஹோட்டலில் போய் சூடா இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை ஆர்டர் பண்ணிட்டு உட்காருகிற மாதிரி ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலை செய்திருக்கேன்.
அவர் சமையலறையில் நுழைய முடியாது. ஆனால், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ‘டிஷ்’ பேரைச் சொல்லிட்டா அருமையா பரிமாறுவார் ரஹ்மான். இதுக்கு முன்னாடி ஜி.வி.பிரகாஷ், கார்த்திக்கை அறிமுகப்படுத்தியிருக்கேன். அங்கே சமையல்கட்டுக்கே போய் கையைச் சுட்டுக்கிட்டிருக்கேன். மிளகாய்ப் பொடியைக் கொட்டியிருக்கேன். கீ போர்டில் கையை வச்சு, சிங்கர்களோட நின்னு கரெக்ஷன் சொல்லியிருக்கேன். இதில் அந்த வேலையெல்லாம் இல்ல. ரஹ்மான் பெஸ்ட்!’’
‘‘வெற்றி கொடுத்திருக்கீங்க. நல்ல சினிமாவும் எடுக்கத் தெரியும். ஜாலியா ஒரு படம் பண்ண மனசு இல்லையா? ஒவ்வொரு தடவையும் ரிஸ்க்கை எதிர்பார்க்கிறது கஷ்டமா தெரியலையா?’’
‘‘என் மனைவி கூட இதே கேள்வியைக் கேட்டுட்டு இருக்காங்க. ரொம்ப டிஸிப்ளினோட, ரொம்பவும் ஃபைன் ஃபினிஷிங் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் படங்கள் செய்யணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ‘சங்கராபரணம்’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘சலங்கை ஒலி’ மாதிரி ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்யத்தான் ஆசை.
ஆனால், இப்ப எனக்கு இந்த ட்ராக்கிலிருந்து நழுவி ஓடி வந்திடணும்னு தவிப்பு இருந்துக்கிட்டே இருக்கு. இது ‘ரிஸ்க்’கான வேலை. சந்தானம் காமெடி, பட்டையைக் கிளப்புற ஆக்ஷன், ரத்தத்தை சாம்பாரோட அள்ற வயலன்ஸ்… இதெல்லாம் எப்படிப் போய்ச் சேருதுன்னு தெரியுது. எனக்கும் இது தெரியும். ஆனா, வேறு விதமா பயணிக்கலாம்னு நினைக்கிறேன். ரோட்டில் கை, கால் விளங்காத ஒருத்தனை ஒரு பொண்ணு வண்டியில வச்சி தள்ளிக்கிட்டுப் போகுது. அந்தப் பொண்ணோட வலி…
அதற்குள் ஒரு கதையிருக்கு. படம் பண்ணினா, ‘கேன்’ஸில் திரையிடலாம். ஆனால், அந்த எமோஷனைப் பார்க்க ஆடியன்ஸ் இருக்காங்களா? நம்ம எண்ணம் சரியா? தொடர்ந்து இந்தக் கேள்விகள் என்னை சங்கடப்படுத்துது. திரும்பத் திரும்ப அடித்தட்டு மக்கள், யார் பார்வையும் படாத மக்கள் வாழ்க்கைதான் நினைவுக்கு வருது.
இப்பல்லாம் எல்லாரும் தூங்கின பின்னாடி மூணு மணிக்கு கொட்ட கொட்ட ஒரு கொசு மாதிரி முழிச்சிட்டு இருக்கேன். தப்பிக்கணும்!’’‘‘உங்க குரு ஷங்கர் கூட எப்போதும் ஆக்ஷன், கொஞ்சம் சமூகநலன்னுதான் எடுக்கிறார். நீங்க அப்படியில்லை!’’
‘‘என் பாதை இதுதான்னு நினைக்கிறேன். மரத்துல தொங்குற புளியம்பழம் பார்த்திருக்கீங்களா? உள்ளே ஓடும், பழமும் ஒரு துளிகூட ஒட்டாது. உறிஞ்சி சாப்பிட்டால் அப்படி ஒரு டேஸ்ட். கொன்றைப் பூவை சாப்பிட்டால் ஒரு சுவை. இந்தத் தலைமுறை அந்தப் புளிப்பையும், துவர்ப்பையும் அனுபவிச்சிருக்கவே முடியாது. அதையெல்லாம் அனுபவிச்சதாலதான் இப் படி கஷ்டப்படுறேன். டொரன்டினோ மாதிரி, நோலன் மாதிரி எந்தக் கலாசாரத்தின் வேரும் இல்லாமல் படம் பண்ணிட முடியும்.
என்னால் முடியலை. இப்பக்கூட, ஊருக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு வாசல்ல வேகாத வெயிலில் ஒருத்தன் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு ‘ஐஸ்… ஐஸ்…’னு கத்திக்கிட்டே இருந்தான். அந்தக் குரலும் வலியும் என்னைத் துரத்திக்கிட்டே இருக்கு. தெரிந்தோ… தெரியாமலோ ஜெயமோகன், எஸ்.ரா, லா.ச.ரானு படிச்சிட்டு வந்தது தொந்தரவு பண்ணுது. மறுபடியும் தப்பிக்கணும்!’’
‘‘ஆடியன்ஸ்சை குறை சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால், அவங்க நுணுக்கத்தை இழந்துட்டாங்களோ..?’’‘‘இங்கே இருக்கிற கல்விக் கூடங்களுக்குப் பிறகு இன்னொரு கல்விக்கூடம் தியேட்டர்தான். வாத்தியார் எவ்வளவு கத்துக்கொடுக்கிறாரோ, அதே அளவு சினிமாவும் கத்துக் கொடுக்குது. என் பையன் ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறான். அவன் மொழி வேறயா இருக்கு. சினிமா பார்த்து வளர்கிற ஒரு தலைமுறையோடு சேர்ந்து நிக்கிறோம்.
இதில் புத்தகங்களுக்கு இடமேயில்லை. பாலைக் கொடுத்தால் பால்தான். கள்ளைக் கொடுத்தால் கள்ளுதான். நீங்க கொடுத்ததைத்தான் திரும்ப எதிர்பார்க்க முடியும். சினிமா பார்த்துத்தான் மொத்த சென்ஸும் இங்க வளர்ந்துக்கிட்டு இருக்கு. அதனால ஆடியன்ஸ் பத்தி எதுவும் சொல்லக் கூடாது!’’
நா.கதிர்வேலன்
கமல் ஸ்பெஷல் பேட்டி
சென்ற இதழ் தொடர்ச்சி…
‘‘ஒரு கட்டத்தில் கமல், ரஜினி ரெண்டு பேரும் ஒரே மாதிரி படம் தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு ‘நாயகன்’, ‘குணா’, ‘மகாநதி’ன்னு புது ட்ராக் எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’
‘‘ஆரம்பத்திலேயே அப்படித்தான். எனக்கு ஞாபகமிருக்கு. ஒரு வேப்ப மரத்தோட நிழலில் நானும் ரஜினியும் காரசாரமா பேசிக்கிட்டு இருந்த நேரம். இன்னிக்கும் அப்படித்தான். ‘நீ… வா… போ…’ன்னு பேசிக்கிறதை நிறுத்தி நாளாச்சு. 60 வயசில எனக்கு வியப்பு என்னன்னா, எங்க ரெண்டு பேருக்கும் வயசு அப்ப 25தான்.
‘பெரிய ஆளா வரப்போறோம்’னு தன்னம்பிக்கை அப்பவே ரெண்டு பேருக்கும் இருந்தது. நாம ரெண்டு பேரும் ‘வாடா… போடா…’ன்னு சத்தம் போட்டுப் பேசினால், பார்க்கிறவங்களும் அப்படிப் பேசுவாங்கன்னு, புரிஞ்சி, நிறுத்தினோம். வேறு ஒரு சம்பவத்திற்குப் பிறகு, ‘எதுவா இருந்தாலும் நாமதான் பேசிக்கணும், இன்னொருத்தர் தூது வரக்கூடாது’ன்னு பேசிக்கிட்டோம்.
அதனால் 30 வருஷமா எங்க நட்பு நிற்குது. இத்தனைக்கும் நாங்க சக போட்டியாளர்களே. ஒரு சமயம் ‘எல்லாப் படத்திலும் ஸ்டைல் பண்றீங்களே… மாத்திக்கலாமே’ன்னு கேட்டப்போ, ‘இந்த வேலையெல்லாம் வேண்டாம்.
நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியும். அதை நீங்க பண்ணுங்க, இதை நாங்க பண்றோம்’னு சொன்னார். சிரிச்சேன் நான். ‘என்ன?’ன்னு கேட்டார். ‘இல்லை… புரிஞ்சது எனக்கு’ன்னு சொன்னேன். ‘கெட்டிக்காரத்தனமா’ன்னு கேட்டேன். ‘பாருங்க! இதுவும் ஜெயிக்கும், அதுவும் ஜெயிக்கும்’னு சொன்னார். அந்தப் போட்டி இதுவரைக்கும் இருக்கு.
இந்த நட்பில் பொறாமையை விட உத்வேகம் வரும். நல்லா இருந்தா ‘மிகச்சிறப்பு’ன்னு சொல்வேன். அதே மாதிரி அவரும் என் படங்களைச் சொல்வார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு, மாலையெல்லாம் போட்டு இருக்கார். திடீர்னு காலையில் மாலையோடு வந்து நின்னிருக்கார். அவரைப் பத்தி ஏதாவது விமர்சனம் இருந்தால், நேரா போன் எடுத்து சொல்வேன். அவர் மறுப்பார்.
‘இல்லை, நான் பண்ணினது ரைட்’னு சொல்வார். அதனால்தான் எங்க நட்பில் கொஞ்சமும் குறைவு இல்லை!’’‘‘சில நல்ல படங்களை எடுத்து, என்ன காரணத்தாலோ வேற டைரக்டர்களுக்கு அந்தப் படங்களுக்கான சிறப்பை கொடுத்திட்டீங்க. சினிமாவை ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு வேண்டுமானால் உங்க பங்கு புரியும். ஏன் அப்படி செய்தீங்க?’’
‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். எனக்கு சினிமான்னா வீட்டில சமைக்கிற மாதிரி. அக்கா உப்பு போட்டாங்க, தங்கச்சி நறுக்கிக் கொடுத்தா, அம்மா சமையல் பண்ணுவாங்க. எப்படி
யிருந்தது சமையல்னா அம்மாவைத்தான் காட்டுவாங்க. ஒரு நாளைக்கு அப்பாகிட்ட மட்டும் ‘இன்னிக்கு உங்க பொண்ணு சமைச்சது’ன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் கத்துக்கிட்டது கே.பி.கிட்ட. அங்கே ரிஃப்ளெக்டர் பிடிச்சிருக்கேன். எடிட்டிங் போயிருக்கேன். ‘புன்னகை மன்னனி’ல் கதாநாயகன் விழுகிற மலை உச்சிக்கு லொகேஷன் பார்க்கப்போனது நான்தான்.
இப்படியெல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கோம்னு பெருமை கிடையாது. சொன்னதைக் கேட்டு அதை எடுக்க ஒருத்தர் தயாராக இருந்ததுதான் பெரிய விஷயம். எல்லாத்திலும் பங்கு இருக்கு, இல்லைன்னு சொல்லிடலாம். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ‘கல்யாணம் கச்சேரி’ பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன்.
அதை ‘படியில் இறங்கிட்டே ஆடுறியா’ன்னு கேட்டது கே.பி. ஆட முடியும் என்ற திறமையைக் காட்டினது மட்டும் நான். அப்ளாஸ் எனக்குத்தான் வந்தது. யாரும் கே.பியை நினைச்சு கை தட்டலை. நான் டாலர் தெரிய போன் பண்ணிப் பேசும்போது, இளைஞர்களுக்கு அது குதூகலம்தான். அது என் நடிப்பில்லை. கே.பி. எழுத்தில் அப்படி இருந்தது. அது அவர் பண்ணின காதல். ஆனால் எனக்கு ‘காதல் இளவரசன்’னு பட்டம் வந்துச்சு.
இப்படி எனக்கு வாய்ப்பைக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இப்ப ‘பாபநாசத்தை’ ஜீத்து ஜோஸப் டைரக்டர் பண்றார். என்னுடைய கல்வியில் ஜீத்து செய்யும் நல்ல விஷயங்களும், அவர் செய்யும் தவறுகளும் என் பாடப் பட்டியலில் வந்துடுது. சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயின்டிங் மாதிரி ‘கேன்வாஸ் ஆச்சு, ஓவியர் ஆச்சு’ன்னு ஒதுங்கிட முடியாது. கவிதைன்னா பேனா, பேப்பர், வைரமுத்து… அவ்வளவுதான்! வேற யாரும் அங்கே விளையாட முடியாது. ஆனால், சினிமா அப்படியில்லை.
வைரமுத்து, இளையராஜா எல்லாரும் சேர்ந்தது தான். அந்தப் பாடலை ஒருத்தர் நல்லாவும் படம் பிடிக்கணும். காட்சிகள் வரிசையா போகணும். எல்லாம் பண்ணிட்டு ஹீரோவும், ஹீரோயினும் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிட்டு நிற்கக் கூடாது. கம்பனின் ராமாயணம் மாதிரி யாராவது ஒரு ஆளுக்குத்தான் பெயர் நிக்கும். கூட இருந்து படி எடுத்தவன் எல்லாம் காணாமல் போயிடுவான். பரவாயில்லை, அவங்க இல்லாமல் கம்பன் இல்லை!’’
‘‘நடிப்பு மாதிரியே உங்க எழுத்தும் தனிமொழி. நாவல் எழுதப்போவதாக செய்தி கசிந்தது. அப்படியா?’’
‘‘ஜெயகாந்தனைத் தொட்டுப் பார்த்திருக்கேன். கை குலுக்கியிருக்கேன். கண்ணதாசனைப் பார்த்திருக்கேன். பாரதியாரைப் பார்த்ததில்லை. இவங்களோடு இருந்ததெல்லாம் கிட்டத்தட்ட பாரதியைத் தொட்ட மாதிரிதான். திருவல்லிக்கேணி யானைக்குக் கிடைச்ச சந்தோஷம் எனக்கும் உண்டு. இரண்டு பேரையும் ஒண்ணா தொட்டது பாரதியாரை முட்டினதுக்கு சமம். நாவல் எழுதுவது பெரிய விஷயம்.
நானும் ஜெயமோகனும் பேசிக்கிட்டு இருந்தோம். 956 பக்கமுள்ள அவர் நாவலைத் திருப்பிப் பார்ப்பேன். வயிற்றைக் கலக்கும். எவ்வளவு பெரிய வேலை! அதைப் பார்த்து அவர்கிட்ட வியக்கும்போது, ‘உங்களுக்கு ஸ்கிரீன்ப்ளே எழுத எத்தனை பக்கம்?’னு கேட்டார். ‘ஒரு ஸ்கிரிப்ட் எழுத 1000 பக்கம் ஆகும்’னேன்.
‘மர்மயோகி’ எழுதும்போது 20 டிராப்ட் எழுதியிருக்கேன். அதுக்கு முக்கியமான பயிற்சி… கவிதை எழுதுறதுதான். ‘எதுக்கு எழுதறீங்க’ன்னு கேட்டா, ‘காதல் பண்றது எதுக்கு?’ன்னு கேட்கிற மாதிரிதான். காதல் இருக்கு, இளமை இருக்கு… இதுதான் பதில். கவிதை எழுதுவதால் திரைக்கதை சிறக்கிறது; சிக்கனப்படுகிறது; முறுக்கேறுகிறது. சுந்தர ராமசாமி இறந்த பிறகு, ‘இந்த மாதிரி ஒருத்தர் இருந்தார்’னு பேசிக்கிறதில் அர்த்தம் இல்லை. இருக்கும்போது நான் எப்படி நாகேஷை சொல்லிக்கிட்டு இருந்தேனோ, அப்படி ஜெயமோகனையும் சொல்லுவேன்.
நான் ‘இளையராஜாவை நல்ல மியூசிக் டைரக்டர்’னு சொல்றது அவருக்கே கேட்கணும். எனக்கே யாராவது ஒருத்தர் ‘நல்ல நடிகர்’னு சொல்லிக் கேட்கணும். அப்பதான் என் நடிப்பு நல்லாயிருக்கும். இப்ப வேண்டாம், கர்வமாகிடுவான்னு சொல்லுவாங்க.
உங்க பாராட்டுதான் என்னை கர்ப்பமாக்கும். அடுத்த பிரசவத்திற்கு அதுதான் விதை!’’‘‘இப்பவும் நீங்கதான் மேக்கப்பிற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க…’’‘‘துரோணராக நடிக்கும்போது ஏன் தாடி வைக்கணும்? காந்தியாக வரும்போது கண்ணாடி எதுக்கு… கைத்தடி எதுக்கு? சினிமாவில் எல்லா தொழில்நுட்பமும் வரும்.
பழமைவாதிகள்தான் இதெல்லாம் ‘ஏன்’னு யோசிப்பாங்க. முன்னாடி 14 பாட்டு பாடி, நடிச்சிட்டு இருந்தாங்க. ‘அதை ஏன் நீக்கலை’ன்னு யாரும் கேட்கலை? இன்னும் ஏன் பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க? வக்கீலும் டான்ஸ் ஆடுறான்… கணக்குப் பிள்ளையும் டான்ஸ் ஆடுறான். அதை யாரும் விமர்சனம் பண்ணலை. அகத்தியரா நடிக்கிறவர் குள்ளமா இருக்கிறதில் தப்பு கிடையாது. அவருக்கு கையில் கமண்டலம் இருந்தால்தான் புரியும்.
சிவனா நடிச்சா நெத்தியில் ஒரு கண்ணை வரைஞ்சுதான் ஆகணும். அதையெல்லாம் கேள்வி கேட்கிறது மேட்டுக்குடித்தனம். சிவனா நடிச்சா கையில் திரிசூலம் வேணும். நீலக்கலர் அடிக்கணும். திரிசூலம் இல்லைன்னா ராமரா, சிவனான்னு தெரியாது. எல்லாம் சினிமாவுக்கு அவசியம்தான்!’’
‘‘இவ்வளவு பிடிவாதமா நாத்திகத்தை அனுசரிக்கும் விதம் எப்படி கை வந்தது? யாரையும் புண்படுத்தாத நாத்திகம் உங்களோடது…’’‘‘நாத்திகம் கொஞ்சம் புண்படுத்தத்தான் செய்யும். செருப்பு கூட புதுசா இருந்தா புண்படுத்துது. கலவியிலேயே கூட புண் ஆகுது. காரம் கொஞ்சம் அதிகமானா, நாக்கு புண்ணாகும். பாதிப்பு இருக்கத்தான் செய்யும். காலராவுக்கு என்ன காரணம்னா ‘தண்ணீர்’னு முடிக்கிறாங்க. தண்ணீர் விரோதியில்லை; அழுக்கான தண்ணீர்தான் காரணம். ராமானுஜரும், பெரியாரும் அண்ணன் தம்பிதான்.
இருக்கும் சம்பிரதாயங்களை எல்லாம் தூக்கி எறிந்து கோபுரத்தில் ஏறி ‘எல்லோருக்கும் கத்துக் கொடுப்பேன்’னு சொன்னார் ராமானுஜர். ‘யாரடா சூத்திரன், யாரடா தீண்டத்தகாதவன், யாரடா மிலேச்சன், கொண்டு வா அவனை’ன்னு பூணூல் போட்டு பிராமணன் ஆக்கினது நாத்திகம் இல்லையா?
கலைஞர் ‘பராசக்தி’யில் தந்த வசனமும், பைபிளில் இருக்கிற வரியும் ஒரே வரிதான். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது’ என சொன்னது. Tent of thievesங்கிற வார்த்தையே அதில் வருது. அவரும் நாத்திகர்தான். என் கணிப்பு இது. அவரை ஆரம்ப கம்யூனிஸ்ட்னு சொல்லலாம்.
புத்தரும் ஒரு காலத்தில் நாத்திகர். பிறகு அவரே மதமாகப் போகிறார்னு அவருக்கு தெரிஞ்சிருக்காது. நாளைக்கு பெரியார் களஞ்சியம் பைபிளா மாறிடக் கூடாது. பாசம் மிகுதியால், பக்தியாகி, அது மதமாகி விடக் கூடாது. மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள், அது எந்த மதமா இருந்தாலும் எனக்கு சம்மதமில்லை. எனக்கு நாத்திகம் கூட முக்கியம் கிடையாது. மனிதன்தான் முக்கியம். மனிதர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
மதத்தை வியாபாரமாக்கி விளையாடுகிறவர்களை தண்டிக்கிறோமோ இல்லையோ… தள்ளி வைக்கணும். தீண்டக் கூடாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றால், இது மாதிரி துரோகிகள்தான். குழந்தைகளைக் கற்பழிக்கும் சாமியார்கள் கூட இதில் இருக்காங்க. செல்போனில் தன் காமலீலைகளைப் போட்டு வச்சிருக்கிற அந்த சாமியாரிடம் விபூதி வாங்கித் திங்கலைன்னா என்ன கெட்டுப் போச்சு! இது புரியமாட்டேங்குதே… இந்த அக்கிரமத்தை பொறுக்க முடியலையே!’’
(அடுத்த இதழிலும் தொடர்கிறது கமல் மொழி!)
– நா.கதிர்வேலன்
ஓர் அழகான சண்டே… ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கமகமக்கிறது பிரியாணி. யூனிட்டில் அத்தனை பேருக்கும் தன் கையால் சமைத்தளித்திருக்கிறார் தல! ‘‘ ‘மங்காத்தா’வில் அஜித் சார் பிரியாணியை மிஸ் பண்ணிட்டேன்.
அன்னிக்கு நான் ஸ்பாட்ல இல்லை. மறுநாள் ஷூட்டிங் வந்தால் எல்லாருமே பிரியாணி டேஸ்ட்டை புகழுறாங்க. ப்ச்… இந்தத் தடவையும் நான் ஸ்பாட்ல இல்லை..!’’ என்கிறார் த்ரிஷா ஃபீலிங் பறவையாய்! ‘‘அஜித்துக்கு பிரியாணியில் ஆர்வம் வந்தது எப்படி?’’ – அவரின் நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால், அள்ள அள்ள ஆச்சரியம்.
‘‘பிரியாணி மட்டுமில்ல… வெஜ் சமையலிலும் அவர் வெயிட்டு காட்டுவார். மாங்காய், முருங்கைக்காய் போட்டு சாம்பார் வச்சா டேஸ்ட் அள்ளும். ‘தல பிரியாணி சமைக்கிறார்’னு இன்னிக்கு வேணா பரபரப்பா தெரியலாம்.
ஆனா, நடிக்க வந்த புதுசுல இருந்தே அஜித் கிச்சன் கிங்!’’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.‘‘ஃபேமிலி கெட் டுகெதர்ல, அங்கே வந்திருக்கிற ஒவ்வொருத்தருக்கும் யாருக்கு என்ன டிஷ் பிடிக்கும்னு தெரிஞ்சு, அதை சமைச்சு வச்சிருப்பார். எந்த நாட்டுல என்ன ஸ்பெஷல், அதை எப்படித் தயாரிக்கிறாங்கன்னு நெட்ல படிப்பார்.
யூ டியூப்ல அதோட மேக்கிங் வீடியோ பார்த்து, குறிப்பு எடுத்துக்குவார். நமக்கெல்லாம் சைனீஷ், இட்டாலியன் டிஷ் வேணா தெரியும். மெக்ஸிகன் சமையல் தெரியுமா? அதையும் தெரிஞ்சு வச்சிருப்பார் அஜித். அதுல என்னென்ன வெரைட்டீஸ் இருக்கு, எது ஸ்பெஷல், எது ஸ்பைஸி, எது ஆயிலி, அதோட விலை என்னன்னு எல்லா விபரங்களையும் ஃபிங்கர் டிப்ல வச்சிருப்பார். சிக்கன் பீட்சா செய்யிறதில் அவர் ஸ்பெஷலிஸ்ட்!’’ என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், இப்போதெல்லாம் சிக்கன் வெரைட்டிகளை அடுத்தவருக்கு சமைத்துக் கொடுப்பதோடு சரி… நான்-வெஜ் விடுத்து அஜித் சுத்த சைவத்துக்கு மாறி வெகுநாளாகிறதாம். ‘‘சமைக்கிறவங்க கிட்ட ஒரு டிஷ்ஷை செய்யச் சொல்லணும்னா நாம் அதோட பேரை மட்டும்தான் சொல்வோம். ஆனா அஜித், அதை எப்படி செய்யணும்…
முதல்ல எதை வதக்கணும்ங்கிற வரைக்கும் ரெஸிபியோட சொல்வார். ஒரு சூப் வேணும்னா, அதுக்கு வெங்காயம் என்ன சைஸ்ல வெட்டணும்ங்கிறது வரை அவர் இன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்கும். ஸோ, அவர்கிட்ட சமையல்காரனா யார் வேணாலும் இருக்கலாம்’’ என்கிறார்கள் தல டைனிங் டேபிளை பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள்.
‘‘ஷூட்டிங்ல அவருக்கான உணவை அவரே சமைச்சுக்குவார். வெளியூர் ஷூட்னா கூட எலெக்ட்ரிக் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ்னு எல்லாம் அவர் லக்கேஜ் கூட சேர்ந்து போயிடும். புரொடக்ஷன்ல தர்ற சாப்பாட்டை சாப்பிட்டாலும் கூட, மெயின் அயிட்டமா அவரே சமைச்ச உணவுதான் இருக்கும். சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்க மனசையும் வயித்தையும் நிறைய வச்சிப் பார்க்குறதுதான்.
அது அஜித்தோட பிறவிக் குணம். இன்னைக்கு யூனிட்ல ஃபைட்டர்ஸ், டான்ஸர்ஸ்னு நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சா, அன்னிக்கு எல்லாருக்கும் பிரியாணிதான்! இப்படித்தான் அவர் பிரியாணி சமைக்க ஆரம்பிச்சது’’ என்கிறவர்கள் அஜித்தின் பிரத்யேக டயட் பற்றியும் ரகசியம் உடைக்கிறார்கள்.
‘‘ஷூட்டிங் சமயத்தில் ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறிகள், சூப் இதெல்லாம் அதிகம் எடுத்துப்பார். பெப்ஸி, கோக் போன்ற பானங்களை அவர் எந்தக் காலத்திலும் சாப்பிட்டதில்லை. பிளாக் டீ நிறைய சாப்பிடுவார். ஃபுட்ல கான்ஷியஸா இருப்பார். ஐஸ் வாட்டர் குடிச்சா கோல்ட் வரும்னெல்லாம் சொல்ல மாட்டார். டைமுக்கு சாப்பிடணும்ங்கிறதில் மட்டும் ஸ்ட்ரிக்ட். இது அவருக்கு மட்டும் இல்ல… மத்தவங்களுக்கும்தான். ‘நம் உடம்பில பாதி பிரச்னைகள் நேரத்துக்கு சரியா சாப்பிடாததால தான் வருது’ன்னு சொல்வார்.
அவர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தால் அவரைப் பாக்கப் போனவங்களையும் கூட உட்கார்ந்து சாப்பிட வச்சிடுவார். அவர்கிட்ட வேலை பார்க்குறவங்க எல்லாரையுமே டைமுக்கு சாப்பிடச் சொல்லுவார். இதுக்குத்தானே உழைக்கிறோம்னு அடிக்கடி சொல்வார்!ஹோட்டலில் சாப்பிட்டு முடிச்சதும் அந்த ஹோட்டல் செஃப்பைக் கூப்பிட்டுப் பாராட்டுவது அவர் குணம். புது டிஷ்ஷா இருந்தா, ‘எப்படி செஞ்சீங்க?’னு கேட்டு குறிப்பெடுத்துக்குவார். ஆனா, அதோட நிறுத்திக்க மாட்டார்.
அந்த டிஷ்ஷை சமைச்சு, அந்த செஃப்புக்கே அனுப்பி வச்சி ஒப்பீனியன் கேட்பார். சமைக்கிறது ஒரு கலைன்னா, அதைப் பரிமாறு றது இன்னொரு தனிக் கலை. அந்த ஆர்ட் அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம். ரொம்ப ரொம்ப அழகா, கிரியேட்டிவா, டிசைனா அவர் பரிமாறும் அழகே தனி. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… சாப்பிடும்போது போட்டோ எடுத்துக்கறது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாப்பிடும்போது யாராவது போட்டோ எடுக்கறதை ப் பார்த்தா, ‘நோ’ன்னு கண்ணாலயே ரெட் சிக்னல் காட்டிடு வார்!’’ என நெகிழ்கிறார்கள் அவர்கள்.
மகள் அனோஷ்கா ஸ்கூலுக்குக் கிளம்பும்போது ‘டாடி! எனக்கு இது வேணும்’ என எந்த டிஷ்ஷைக் கேட்டாலும், ஷூட்டிங் கிளம்பும் முன்பு அதைச் செய்து வைத்துவிட்டுத்தான் கிளம்புவாராம் அஜித். ஷூட்டிங் இல்லாத நாளில் ‘இன்னிக்கு என்ன வேணும்? லிஸ்ட் கொடுங்க’ எனக் கேட்டு சமைத்துக் கொடுத்து, செல்ல இளவரசி உண்பதை ரசிப்பாராம்!
– மை.பாரதிராஜா
லிங்கா’ பாடல்கள் பராக் பராக்..! உச்சக்கட்டப் பரபரப்பை நெருங்கிவிட்ட ‘லிங்கா’ படத்தின் பாடல் உருவாக்கம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்துவோடு உரையாடினேன்…
”ரஜினி படங்களுக்கு என ஸ்பெஷலாக எழுதுவதாக உங்கள் மீது செல்லமாக ஒரு குற்றச்சாட்டு உண்டு!”
”சிறப்பாக எழுதுகிறோம் என்பது உண்மை; குற்றச்சாட்டு என்பது பொய். எல்லோருக்கும் சிறப்பாகவே எழுதுகிறோம். ரஜினி பாடல்கள் மட்டும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. காரணம், சமூகத்தின் தட்பவெப்பத்தோடு ரஜினி படங்கள் சம்பந்தப்பட்டிருப்பது அல்லது சம்பந்தப்படுத்தப்படுவது!”
”எப்படி?”
”அரசியலை ரஜினி விரும்புகிறாரோ இல்லையோ… அரசியல், ரஜினியை விரும்புகிறது. அவரோ ‘அரசியல்’ என்ற கடலின் ஓரம் கால் நனையாமல் நடந்து கொண்டே இருக்கிறார். கடலுக்குள் அவரே குதித்துவிடுவாரா அல்லது தள்ளப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஒவ்வொரு படத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது!”
” ‘லிங்கா’ படத்திலும் அரசியல் இருக்கிறதா?”
”எதில்தான் அரசியல் இல்லை? நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், குடிக்கும் தண்ணீர் எல்லாம் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறபோது, ஒரு சமூகப் போராளியைச் சித்திரிக்கும் கதையில், அரசியல் ஊடும் பாவுமாக உள்ளாடவே செய்யும். அதைக் கட்சி அரசியல் ஆக்குவதும், கால அரசியல் ஆக்குவதும் அவரவர் பார்வை!”
”பாடல் பதிவில் ரஜினியோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்!”
”இந்தப் படப் பணியின்போது நான் கண்டுகொண்ட ரஜினியின் சமூக அக்கறை, அவர் மீதுகொண்ட அன்பை அதிகப்படுத்தியது. ஒவ்வொரு படத்திலும் அவருக்கான அறிமுகப் பாடல் எங்களுக்கு ஓர் அறைகூவல். இந்தக் காலகட்டத்தில் எதை உள்ளடக்கமாக வைப்பது என்பதில் எங்களுக்கு மண்டை உடையும்; சண்டை நிகழும். இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் தீர்மானிக்கும் நல்ல வரிகளை ரஜினி பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்; தலையிட மாட்டார். ஆனால் ‘லிங்கா’ படத்தின் பாடலில் ரசிகர்கள் மீதுகொண்ட அன்பு காரணமாக, ‘எதிலும் அளவோடு இருங்கள்; எல்லை தாண்டாதீர்கள்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்தச் சொன்னார். அவர் கேட்டுக்கொண்டபடி பாட்டு வரிகளைத் தீட்டியிருக்கிறேன்!”
”இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பற்றி…”
”ரஜினி போன்ற இமாலய நடிகரை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு பெரும் படத்தை முடிப்பது ஒரு ராட்சசனால் மட்டுமே முடியும். அவர் திட்டமிடுவதில் மந்திரி; செயல்படுத்துவதில் மன்னன். திரையுலகில் பொய்யே சொல்லாத மிகச் சிலருள் அவரும் ஒருவர் என்பது அவரிடம் நான் கண்டு ரசிக்கும் பெருங்குணம்!”
” ‘லிங்கா’வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பங்களிப்பு…”
”ரஹ்மான், புகழையும் அனுபவத்தையுமே பங்காகக் கொடுத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு துறையில் வெற்றிபெற்ற யாரும், ஒரு பெரிய எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். வெற்றி பெற்ற ஒருவனைப் பின்பற்றும் நகல் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு காலப்போக்கில் அதிகம் ஆகும்; அதை வெற்றிகொள்வதற்கு எதிராளிகளோடு போராடக் கூடாது. நகல் எடுக்க முடியாத தூரத்துக்குத் தன்னைத்தானே ஒரு கலைஞன் நகர்த்திக் கொள்ள வேண்டும். இது அரசியல், தொழில், கலை… என அனைத்துக்கும் பொருந்தும். ஆகவே, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை நகல் எடுக்கும் கூட்டத்தில் இருந்து விலகி, வேறொரு தளத்துக்குத் தன் இசையை நகர்த்தியிருக்கிறார். அந்தப் புதுமையால் அந்தப் பாடல்கள் முதலில் கொஞ்சம் பிடிக்கும்; பிறகு அதிகம் பிடிக்கும்; போகப் போகப் பைத்தியம் பிடிக்கும். ‘லிங்கா’விலும் அந்த மாயம் நிகழவே நிகழும்!”
”பாடல் பதிவின்போது உங்களுக்குள் மோதல் வருவது உண்டா?”
”உண்டு. அதற்கு நீங்கள் வைத்த பெயர் மோதல்; நாங்கள் வைத்த பெயர் ஊடல். ‘லிங்கா’வில் வருகிற ஒரு காதல் பாடலில் அந்த ஊடல் நிகழ்ந்தது. ரஜினியைப் பார்த்து சோனாக்ஷி சின்ஹா பாடுகிறார்…
‘என்னைவிட என்னைவிட அழகி உண்டு – ஆனால்
உன்னைவிட உன்னைவிட அழகன் இல்லை!’ என எழுதியிருந்தேன்.
பாடல் ஒலிப்பதிவின்போது ‘ ‘அழகன்’ இல்லை என்ற வரிக்குப் பதிலாக ‘தலைவன்’ இல்லை என மாற்றிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார் கே.எஸ்.ரவிகுமார். ஏ.ஆர்.ரஹ்மானும் அதைப் பலமாக ஆதரித்தார். நான் சொன்னேன்… ‘பொருந்தாது; என்னைவிட என்னைவிடத் தலைவி உண்டு. ஆனால், உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை’ என எழுதலாம். ‘அழகி’ என சொன்னவுடன் ‘அழகன்’ எனச் சொல்வதுதான் இயல்பு என்றேன். ஆனால், பல காரணங்கள் சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டார்கள். படப்பிடிப்பின்போது பாடலைக் கேட்ட ரஜினிகாந்த், ‘இப்போது இருக்கிற சூழலில், ‘உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை’ என்பது தேவையா?’ என என் சார்பாகப் பேசியிருக்கிறார். ஆனால், ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. ‘தலைவன்’ என்றுதான் பாடல் வருகிறது.
அந்தப் பாடல் இதுதான்…
பெண்: என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு – ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை – ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை.
பெண்: சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் – இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
பெண்: நூறு யானைகளின்
தந்தம்கொண்டு – ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண்: தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிக்காரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி
ஆண்: வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் – உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண்: சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா.
ஆழ்வார்பேட்டை முதல் அல் கொய்தா வரை சகலமும் பேசலாம் கமல்ஹாசனுடன். பேசினோம்…
”திடீர்னு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் கமல்; இன்னொரு படம் ரிலீஸுக்குக் காத்திருக்கு. எப்படி ஒரு ஹாட்ரிக் கேம் பிளான்?”
”இது தானா அமைஞ்சது. ஒவ்வொரு கண்ணியும் அதனதன் இடத்தில் பொருந்தி ஓடிட்டு இருக்கு. வெவ்வேறு மனநிலையைப் பிரதிபலிக்கும் படங்கள் என்பதால், உணர்வுக் கலவைகளோடு ஒவ்வொரு பொழுதும் கழியுது. ‘விஸ்வரூபம்-2’ கொஞ்சம் தாமதமா வந்திருந்தாக்கூட, பொங்கலுக்கே வந்திருக்கணும். ஒருவேளை நம்ம மூலமா வந்தா தாமதம் ஆகலாம். இன்னொரு தயாரிப்பாளரிடம் கொடுத்தா படம் பிரமாதமா வரும்னு கெட்டிக்காரத்தனமா நினைச்சுக் கொடுத்தேன். அது இன்னும் தாமதம்தான் ஆகுது. ‘பாபநாசம்’ படம் எதிர்பாராத வேகத்தில் முடிஞ்சிருச்சு. ஆனா, அதுக்கும் முன்னால் முதலில் ‘உத்தம வில்லன்’தான் திரைக்கு வரும்.
‘உத்தம வில்லன்’ – ஒரு நடிகனைப் பற்றிய கதை. எங்களுக்குத் தெரிஞ்ச கதைங்கிறதால பூந்து விளையாடிட்டு இருக்கேன். ‘டபுள் பில்’னு சொல்வாங்க. ஒரே படத்தில் இரண்டு கதைகள், இரண்டு கருக்கள் இணைந்து வரும். வுட்டி ஆலன் இயக்கிய ‘Crimes and Misdemeanors’ படத்துல ஒருத்தர் படம் எடுக்க முயற்சி செய்வார். இன்னொரு பக்கம், ஒரு கொலை வழக்கின் விசாரணை நடக்கும். அந்த மாதிரியான ஒரு முயற்சி ‘உத்தம வில்லன்’. ஹீரோ வேடத்தில் ஒரு வில்லன். உணர்ச்சிபூர்வமான கதை ஒரு பக்கம், காமெடி இன்னொரு பக்கம். ரெண்டும் இணைந்து பிணைந்து ஓடும். இருவேறு காலகட்டங்களில் நடக்கிற கதை. படத்தில் கே.பாலசந்தர் சார் ‘மார்க்கதரிசி’ங்கிற பேர்ல இயக்குநராவே நடிக்கிறார். எனக்கு நிஜ வாழ்க்கையில் அவர்தானே மார்க்கதரிசி. படத்தில் என் பெயர் மனோரஞ்சன். கேரளப் பாரம்பர்யக் கலையான தைய்யம் கலைஞன்!”
”அந்தத் தைய்யம் கலைஞனின் ஸ்டில் பிரபல புகைப்படக்காரரின் பிரதினு பரபரப்பு கிளம்பிச்சே?”
(சின்ன ஆவேசம் தொற்றிக்கொள்கிறது வார்த்தைகளில்…) ”வேப்ப இலையையும் மஞ்சளையும் ஒருத்தன் போட்டோ எடுத்துட்டு போய்ட்டா, உடனே காப்பிரைட்ஸ் எழுதிக் கொடுத்திருவீங்களா. அது அவன் சொத்துனு சொல்வீங்களா… மடையங்களா!’னு கேட்க நினைச்சேன். ஆனா, கேட்கலை.
(இயல்புக்குத் திரும்புகிறார்) அது என் நாட்டுக் கலை. அதை ஒரு வெள்ளைக்காரன் போட்டோ எடுத்துட்டுப் போயிட்டா, உடனே ‘வெள்ளைக்காரன்கிட்ட இருந்து காப்பி’னு குதிப்பீங்களா? அவர் அந்த போட்டோவை எங்கே எடுத்தார்? நான் படம் பிடிக்கப்போன இடத்துலதானே எடுத்தார். சிலர் அவங்க வாயாலேயே என்னைக் கெட்டிக்காரன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் அதே வாயால ‘கமல் ஒண்ணும் அவ்வளவு கெட்டிக்காரனா இருக்க வாய்ப்பு இல்லையே’னு ஆழம் பார்க்கிறாங்க. ரெண்டையுமே கேட்டுக்க வேண்டியதுதான்!”
”ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?”
”சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, ‘இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல… ‘டைம்’ பத்திரிகையும் ‘நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.
ஒரு விஷயம்… நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். ‘தினமணி கதிர்’ல ‘சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன். இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ங்கிற நாவலுக்கும் ‘சொர்க்கத் தீவு’க்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். ‘நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்’னு நான் சொல்லவும், ‘நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.
காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? ‘ஐ ரோபோ’ படம்தானே ‘எந்திரன்’. ஆனா, ‘ஐ ரோபோ’ படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். ‘ஐ ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது? ‘எழுதின ராமாயணத்தைத் தானே நீ திரும்ப எழுதியிருக்கே…’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா? ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா? சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கைவர்ற வரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கை வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.
இன்னொரு விஷயம்… யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. ‘காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத்தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!”
”அப்போ, காப்பி அடிச்சாலும் யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாதுனு சொல்றீங்களா?”
”அது நம்ம ஆளுங்களோட சைக்காலஜி.
‘நீ கெட்டிக்காரன் கிடையாது’னு அடுத்தவனைச் சொல்றதுல நம்ம ஆளுங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம். அவ்ளோ ஏன்… நான் கண்ணதாசனையே குறை சொல்லியிருக்கேனே!
‘வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை பற்றித் தொடரும் பாவ புண்ணியம்’னு பட்டினத்தார் எப்பவோ எழுதிட்டார். அதுல கடைசி வரியில கண்ணதாசன் ‘கடைசி வரை யாரோ?’னு மாத்திட்டார்னு நான் சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு, ‘விடுய்யா… செட்டியார்க்கு செட்டியார் காப்பி அடிச்சுக்கிறாங்க. என்னமோ பண்றாங்க’னு ஒருத்தர் சொன்னார். ஆனா, கண்ணதாசன் மட்டுமே தெரிஞ்ச எனக்கு, அவரைத் திட்டுறதுக்காக பட்டினத்தாரைத் தேடிப் படிச்சேன். அப்படி கண்ணதாசனைத் திட்டினது மூலமா ஒரு சித்தர் பாடல் எனக்கு அறிமுகம் ஆச்சு. அதுமாதிரி இப்ப காப்பினு திட்டுறவங்க, திட்டுறது மூலமா உலக சினிமாவைத் தெரிஞ்சுக்கிறாங்க. அப்போ என் ரசிகன் வளர்ந்துட்டு இருக்கான்னுதானே அர்த்தம். அது நல்ல விஷயம்தான். இப்படித்தான் வளர்ச்சி இருக்க முடியும். இவங்க எல்லாம் சினிமா ரசிகர்களா இருக்கிற வரைக்கும் கமல் வண்டி ஓடும். ஆனா, இவ்வளவு தெரிஞ்சவங்க நடிக்க வந்தா, என் மார்க்கெட் காலி. ‘அடுத்த ஆள் வந்தாச்சு’னு நான் மூட்டையைக் கட்டிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!”
”60-வது பிறந்த நாளில் ‘கிளீன் இந்தியா’னு பரபரப்பு பண்ண நினைச்சீங்களா?”
”நரேந்திர மோடி அரசாங்கம் எனக்குக் கொடுத்தது புது ஆதார் அட்டை அல்ல. கடந்த 30 வருஷங்களா நான் செய்த பணிக்கான சான்றிதழ். என்ன… கெட்டது பண்ணா, உடனே திட்டுவாங்க. நல்லது பண்ணதால, 30 வருஷங்கள் கழிச்சுதான் பார்வையில பட்டிருக்கு. நான் இதை ஒரு விழா மாதிரி எடுத்துக்கிறேன். இதில் என் ரசிகர்களுக்கு ரொம்ப சந்தோஷம். இதைத் தவிர என் ரசிகர்களுக்கு வேற எந்தச் சம்பளமும் கிடையாது. எனக்கும் ரசிகர்களுக்குமான உறவு எப்படி ஆரம்பிச்சதுனு யோசிச்சா, பிரமிப்பா இருக்கு. என் ரசிகர் மன்றங்களை ஒரு நற்பணி இயக்கமா மாத்தலாம்னு நினைச்சப்போ நிறையக் குழப்பங்கள். ‘ரசிகர் மன்றமே வேண்டாம்’னு சொல்லிட்டு இருந்தப்ப, அசோகன் அண்ணன் வருத்தப்பட்டார். ‘ஏன் ரசிகர் மன்றம் வேணும்?’னு அசோகன் அண்ணன் சொன்னது ஆதாயக் காரணங்கள். ‘ரசிகர் மன்றமே வேண்டாம்’னு சிவகுமார் அண்ணன் சொன்னது சுகாதாரக் காரணங்கள். ரசிகர் மன்றம்கிற பேர்ல எல்லாரோட மனித நேரமும் விரயமாயிட்டு இருக்கிறதைத் தவிர்க்கவும், எனக்கு அதுதான் சரியான வழியாத் தோணுச்சு. அவங்களை எதுக்கு வெறும் ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’னு நெகடிவ்வா யோசிக்கணும்? நற்பணி இயக்கமா மாத்தினேன். அப்பவும் சிலர் மந்தமாவே இயங்கினாங்க. அரசியலுக்குள் நுழையலாம்னு சிலர் கையை முறுக்க ஆரம்பிச்சாங்க. அங்கே போயஸ் கார்டனில் ரஜினி கையைப் பிடிச்சு முறுக்கிட்டு இருந்தாங்க. என்கிட்ட யாராவது தோளில் கையைப் போட்டு தப்பான அறிவுரை சொன்னாக்கூடக் கேட்டுப்பேன். ஆனா, கையை முறுக்கிட்டு சரியான அட்வைஸ் சொன்னா, கேட்டுக்க மாட்டேன். அரசியலே வேண்டாம்னு பிடிவாதமா இருந்துட்டேன்!”
”ரஜினியை இப்பவும் ‘அரசியலுக்கு வாங்க வாங்க’னு கூப்பிட்டுட்டே இருக்காங்களே. உங்களுக்கு சமீபத்தில் அப்படி அழைப்பு வந்ததா?”
”முந்தி நிறைய வரும். இப்போ நிறுத்திட்டாங்க. ஏன்னா, நான் வர மாட்டேன்னு கெட்டிக்காரங்களுக்குத் தெரிஞ்சிருச்சு. அது புரியாம பதற்றத்துல இருந்தவங்கதான், ‘வா, வா’னு இழுத்துட்டே இருந்தாங்க. அப்போலாம் அவங்களை நான் மிரட்டக்கூடச் செஞ்சிருக்கேன். ‘ஐயா… நான் வரக் கூடாதுனு பிரார்த்தனை பண்ணிக்கோங்க. அப்படி வந்தா, உங்களுக்கு நல்லது இல்லை’னு!
‘விஸ்வரூபம்’ பிரச்னை வந்தப்ப, ‘நாங்க பார்த்துக்கிறோம்’னு நிறையப் பேர் வந்தாங்க. ஆனா, ‘எங்க கூடவே வந்திருங்க’னு யாரும் சொல்லலை!”
” ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் பிரச்னையான சமயம், ‘வெளிநாட்டுக்குப் போயிருவேன்’னு சொல்லி ரொம்ப எமோஷனல் ஆகிட்டோமேனு அப்புறம் தோணுச்சா உங்களுக்கு?”
”எமோஷனல்னு சொல்றதைவிட, அப்போ நான் கொஞ்சம் கோபமாத்தான் இருந்தேன். அப்புறம் என் ரசிகர்கள் காட்டிய அன்பில் என் மனம் நெகிழ்ந்திருச்சு. ‘யார் மேலயும் கோபப்படுற அருகதையே உனக்கு இல்லை’னு ஒரு பணிவு மனசுக்குள் வந்திருச்சு. அந்த நேரத்தில் ‘நமக்கு அநியாயம் நடக்குதே’ங்கிற கண்ணகியின் கோப மனநிலையில்தான் நானும் இருந்தேன். ஆனா ரசிகர்கள், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராம எனக்காகக் கூடி நின்னாங்க. நிலப்பத்திரத்தைக் கையில வெச்சுட்டு ராயப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல காருக்குள் காத்திருக்கேன். கையில குப்பைக்கூடையும் வெளக்குமாறும் வெச்சிருந்த ஒரு அம்மா, ‘எழுதிக் கொடுக்காதே… எழுதிக் கொடுக்காதே… நாங்க படம் பாக்குறோம்’னு கத்தினாங்க. கண்கள் கலங்கிட்டேன். அந்த அன்புக்கு என்ன கைமாறு பண்ணப்போறேன்னுதான் எப்பவும் யோசிச்சுட்டே இருக்கேன்!”
”தமிழ் சினிமா சூழல் இப்போ எப்படி இருக்கு?”
”எப்பவும்போல, ‘இன்னும் தேவை… இன்னும் தேவை’னு கேட்கிற நிலைமையில்தான் இருக்கு. வியாபார உந்துதல் காரணமா… இல்லை, ‘இதுவே போதும்’கிற நினைப்பு காரணமானு தெரியலை… பல படங்கள் நாட்டுப்புறத்தனமா இருக்கு. மும்பையில், கேரளாவில் நடப்பது எல்லாம் ஏன் இங்கே நடக்க மாட்டேங்குதுனு தெரியலை. அங்கே சினிமாவும் இலக்கியமும் ஒண்ணுக்கு ஒண்ணு கலந்து பழகிக்குது. ஆனா, இங்கே அரசியலும் ஊடகங்களும் சினிமாவுக்குள் கலந்திருக்கு. அது நல்லதா கெட்டதானு நல்ல ஆராய்ச்சியாளர்கள் சொல்லட்டும். இப்படி இருக்கும்போது ஒரு செய்தியை நான் எப்படி நம்புறது? ‘சார்பற்ற’னு யாரை நம்புறது? எல்லாருமே செய்தியில் கொஞ்சம் உப்பு போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. ‘இன் தி பின்ச் ஆஃப் சால்ட்’னு சொல்ற மாதிரி!”
”தமிழ் சினிமா வியாபாரம் சின்னதா இருந்தப்போ நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதில் அர்த்தம் இல்லைன்னு சொன்னீங்க. ஆனா, இப்போ இந்தியாவில் இந்தி சினிமாவுக்கு அடுத்து தமிழ் சினிமாதானே மாஸ். இன்னமும் உங்க ரெண்டு பேரையும் சேர்க்கிற பட்ஜெட்டும் கேன்வாஸும் கிடைக்கலையா?”
”நம்புங்க…. இன்னமும் அந்த அளவு பணம் கைக்கு வரலை. கிடைக்க வேண்டிய பணம் கிடைச்சா, சிரஞ்சீவியையும் நடிக்கவைக்கலாம்; அமிதாப்பையும் ஆடவைக்கலாம்; நியாயமா வரவேண்டிய பணம் வந்தா, சல்மான் கான், ஷாரூக் கான் ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்து, அதில் என்னையும் ரஜினியையும்கூட நடிக்கவைக்கலாம். ஆனா, மார்கெட்டையே இன்னும் யாரும் புரிஞ்சுக்கலை. ‘அந்த மார்க்கெட் எப்போ வரும்?’னு கேட்டா, வரவைக்கணும்னு சொல்வேன். ‘வெள்ளைக்காரன் போவான்’னு காத்திருந்தா, சுதந்திரம் கிடைக்காது; போகவைக்கணும்!”
”சமீபமா பெரிய ஸ்டார் நடிச்ச படங்கள் வெளியாகிறதுல பெரிய சிக்கல் உருவாகுதே?”
”அந்தப் பிரச்னை எப்பவும் நடக்கும் சார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சமயத்துல எம்.ஜி.ஆருக்கு நடக்கலையா? ‘பராசக்தி’யில் கலைஞருக்கும் ‘துக்ளக்’கில் சோவுக்கும் அந்தச் சிக்கல் வந்துச்சே. இந்த மாதிரி இடைஞ்சல்களுக்குப் பயந்துட்டுத்தான், எல்லாரும் ‘சபாஷ் மீனா’ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!”
”பளபள விளம்பரங்களோட வெளியாகிற சினிமாக்களை சமூக வலைதளங்களில் தாறுமாறா விமர்சிக்கிறாங்கனு இண்டஸ்ட்ரியில் கொந்தளிக்கிறாங்களே?”
”விமர்சனத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேன்னு சொன்னவன் நான். ‘பண்டிதன்’னு சொல்றவனுக்கு ‘பாண்டித்யம்’ இருக்கானு முதலில் பார்க்கணும். ஆனா, இன்னைக்கு உலகத்துல விமர்சனத்தை ஒண்ணுமே பண்ண முடியாது; தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது. முன்னாடி இடைவேளை சமயம் தியேட்டர் பாத்ரூமில் அப்படியான விமர்சனம் கிளம்பும். அதைக் காதுகொடுத்துக் கேட்கவே முடியாது. ஆனா, அதைக் கேட்டு வாழ்ந்தவரும் ஒருத்தர் இருக்காரு. அவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவர் கம்பெனியில் நாங்க வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, சினிமா பார்க்க டிக்கெட் எடுத்து தருவார். ஒரே நிபந்தனை… பட இடைவேளை சமயத்திலும் படம் முடிஞ்ச பிறகும் பாத்ரூமில் என்ன சொல்லித் திட்டுறாங்கனு அட்சரம் பிசகாம அவர்கிட்ட சொல்லணும். அதுக்குத் தனியா காசு தருவார். ஒரு படம். பேர் வேணாம். அந்தப் படம் பார்த்துட்டு அவர்கிட்ட ‘ரொம்பத் திட்டுறாங்க அய்யா’னு தயங்கித் தயங்கிச் சொன்னேன். ‘என்ன திட்டுறாங்க?’னு கேட்டார். ‘கெட்டக் கெட்ட வார்த்தையில திட்டுறாங்க’னு சொன்னேன். ‘அதான்டா… யாரைத் திட்டுறாங்க?’னு கேட்டார். ‘வீட்ல உள்ளவங்களைத் திட்டுறாங்க’னு மென்னு முழுங்கிச் சொன்னேன். ‘அதான்டா… அம்மாவையா, அக்காவையா?’னு சிரிச்சுட்டே கேட்டார். அதையும் சொன்னேன். அதே படத்தை அவர் இந்தியில் ரீமேக் பண்ணி வெற்றிப்படமாகக் கொடுத்தார். ‘இங்க தப்பு பண்ணேன்டா… அதை அங்கே சரி பண்ணேன்’னு சொன்னார். அந்த பாத்ரூம் திட்டு பத்தி சொன்னப்போ, ‘எவன்டா சொன்னான்?’னு அவர் கோபப்படலை. ‘ஏன் சொன்னான்?’னு யோசிச்சார். ‘ஏதோ தப்பு செஞ்சிருக்கேன். அதை ரசிகன் அவன் பாஷையில சொல்றான்’னு யோசிச்சதுனாலதான் அவர் சாண்டோ. ‘திட்டுனவன் வீடு எங்கேடா?’னு அவர் கோபப்பட்டிருந்தா, அவர் சாதாரண சின்னப்பா தேவராத்தான் இருந்திருப்பார். அப்போ கழிப்பறையில கேட்ட திட்டுகள் எல்லாம் இப்போ நெட்ல கேட்குது. நாமதான் நெருப்புக்கோழி மாதிரி தலையை மண்ணுக்குள்ள புதைச்சுட்டு உக்காந்திருக்கோம். ஆள் அனுப்பி பாத்ரூமில் உளவு பார்க்கிற வேலைகூட இல்லை. நேரடியாவே தெரிஞ்சுக்கலாம். அதைச் சாதகமாத்தானே பார்க்கணும்.
நடிகர் திலகம் ஒருபோதும் தன்னை நடிகர் திலகமா நினைச்சுக்கிட்டதே இல்லை. தான் ஒரு நல்ல நடிகன்னு மட்டும்தான் நினைச்சுட்டு இருந்தார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் ‘என்னை ஒப்புக்கிட்டாங்களா, இயக்குநரா ஏத்துகிட்டாங்களா?’னு பதற்றமாவே இருப்பார். போற-வர்ற ஆளுங்ககிட்ட கேட்டுட்டே இருப்பார். ‘ஆனந்த விகடன்’ விமர்சனத்துல என்ன எழுதுவாங்கனு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பார். புரண்டு புரண்டு படுத்திட்டு இருப்பார். ஒரு படத்துக்கு அவர் எதிர்பார்த்த விமர்சனம் வரலை. உடம்பே முடியாமப்போயிருச்சு. ‘ஏன் சார் இவ்வளவு கவலைப்படுறீங்க?’னு கேட்டா… ஏத்துக்கவே மாட்டார். அவ்வளவு கவலைப்படுவார்.
எனக்கு விமர்சனம் பிடிக்காதுதான். ஆனா, அதை நான் ஒதுக்கிட மாட்டேன். அடுத்த அப்ளாஸுக்கான அட்வான்ஸ்னு நினைச்சுப்பேன். அவனைப் பேசவிடாம தடுக்குறதால நாம ஜெயிச்சுக் காட்ட முடியாது. அதே வாயால நம்மைப் பாராட்டவெச்சுட்டா, அதைவிட பெருமை வேற என்ன இருக்க முடியும்?”
”ஒரு இயக்குநரா ‘நடிகை’ ஸ்ருதியை எப்படி மதிப்பிடுவீங்க?”
”ஓர் உதாரணத்துக்குச் சொல்லணும்னா, நடிகை ஸ்ரீதேவிக்குக் கிடைச்சதுபோல ரொம்ப அரிதான வாய்ப்புகள் ஸ்ருதிக்குக் கிடைச்சிருக்கு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதாவது சினிமான்னா என்னன்னு புரியுறதுக்கு முன்னாடியே, அதை ரொம்பப் பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு. எனக்கும் அப்படி சின்னப் பையனா சினிமாவை வேடிக்கை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் சிவாஜி சார் வீட்டுக்குப் போவேனே தவிர, அவர் ரூம் ‘எப்படி இருக்கும்?’னு பார்த்தது கிடையாது. ஸ்ருதி அவர் ரூமுக்குள்ள போய்ட்டு வரும். குளிக்க டவல் எடுத்துக் கொடுக்கும்.
அப்படி ஒரு நாள் வீட்டுக் கொல்லைப்புறத்து வேப்ப மரத்தடியில், சிவாஜி சார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போ ஸ்ருதிக்கு ஆறு, ஏழு வயசு இருக்கும். அதைக் கூப்பிட்டு வம்பு இழுக்குறார். ‘இங்க வாடி… உங்க அப்பன் பெரிய ஆக்டரா?’னு அவர் கேட்க, ஸ்ருதி முகத்தைச் சுண்டி, ‘ஆமா’னு சொல்லியிருக்கு. ‘உங்க அப்பன்கிட்ட கேட்டுப் பார்த்தியா… யாரு பெரிய நடிகன்னு?’ அவர் திரும்பக் கேட்டிருக்கார். ‘அப்பாதான்’னு ஸ்ருதி சொல்லியிருக்கு. ‘அதெல்லாம் இல்லை. என் பேரைச் சொல்வான்டி’னு அவர் சொல்லிட்டு, ‘பந்தயம் வெச்சுக் கலாமா… உங்க அப்பனைவிட நான்தான்டி பெரிய நடிகன். உனக்கு நடிச்சுக்காட்டவா?’னு அவர் கேட்டதும் ஸ்ருதி, ‘அதெல்லாம் வேணாம். இந்த மரத்துல ஏறிக்காட்டுங்க’னு சொல்லியிருக்கு. அந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கலை. அவருக்கு என்ன பண்றதுனு புரியலை. ‘யப்பா உன் பொண்ணுவிட்ட சவாலை, என்னால தாக்குப்பிடிக்க முடியலை. மரத்துல ஏறுறதுதானடா உன் நடிப்பு?’னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சார். அப்போ அவர் நிஜமாவே ‘என்ன சொன்னார்?’ங்கிற அர்த்தம் இப்போ ஸ்ருதிக்குப் புரிஞ்சிருக்கு. அந்த வெற்றி அவங்களுக்கு விபத்து அல்ல. ஆனா, இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கு. என்கிட்ட இல்லாத திறமை அவங்ககிட்ட இருக்கு. நான் எழுத மட்டும்தான் செஞ்சேன். அவங்க இசையமைச்சாங்க; எழுதவும் செய்வாங்க. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு தனி ஆளா பேக்ரவுண்டு ஸ்கோர் அடிச்சு முடிச்சுட்டுப் போயிட்டாங்க. அந்தத் திறமை இன்னைக்கு எத்தனை நடிகைகள்கிட்ட இருக்கு? எனக்குத் தெரிஞ்சு இல்லைனுதான் சொல்வேன்!”
”அக்க்ஷரா நடிக்க வந்ததும் எதிர்பாராத திருப்பமா இருக்கே?”
”அக்ஷரா நடிப்பாங்கனு நானும் எதிர்பார்க்கலை. அவங்களுக்கு டெக்னிக்கல் சைடுதான் ஆர்வம் அதிகம். மும்பையில் உதவி இயக்குநரா இருந்தாங்க. நல்லா டான்ஸ் ஆடுவாங்க. திடீர்னு ‘சமிதாப்’ படத்துல அமிதாப்ஜி, தனுஷ்கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போன வாரம் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. ‘ஃபென்டாஸ்டிக் ஆக்டிங். க்ளோஸ்அப் வாஸ் குட்’னு போட்டு கீழே அமிதாப்னு இருந்துச்சு. அக்க்ஷரா நடிப்பைப் பாராட்டி, அமிதாப் அனுப்பின மெசேஜ் அது. ‘அமிதாப் இப்படி என்கிட்டகூட ஒரு தடவையும் சொல்லலையேம்மா’னு பூரிப்பா பதில் சொன்னேன். அக்ஷரா இயக்கப்போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டு திடீர்னு நடிச்சதும், கே.பி. சார் என்கிட்ட சொன்னதுதான் ஞாபகம் வந்தது. நானும் முதல்ல இயக்குநர் ஆகணும்னு சான்ஸ் கேட்டு அவரைத்தான் சந்திச்சேன். உடனே என் பொடனியில் தட்டி, ‘இயக்குநரானா, ஆட்டோரிக்ஷாவுலதான் கடைசி வரைக்கும் ஊர் சுத்திட்டு இருப்ப. முதல்ல நடி. வீடு எல்லாம் வாங்கிட்டு அப்புறம் இயக்குறதைப் பத்தி யோசி’னு சொன்னார். பிறகு நான் முதல் படம் இயக்கும்போது, ‘என்னடா திடீர்னு படம் டைரக்ட் பண்ற?’னு கேட்டார். ‘வீடு கட்டிட்டேன் சார்’னு சொன்னேன். ‘ஆனா, 40 வருஷம் ஆச்சேடா. தாஜ்மஹாலே இதைவிட சீக்கிரம் கட்டிட்டாங்களே…’னு சிரிச்சார்!”
”60 வயசு… சினிமாவில் வேகத்தை அதிகரிக்கணும்னு எதுவும் திட்டம் இருக்கா?”
”ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்னும் ஆனந்தமா அனுபவிக்கணும்னு மட்டும் திட்டம். சினிமாவில் பரபரப்பான காலகட்டத்துல நான் என் குழந்தைகளோடு செலவழிச்ச நேரத்தை, மத்த நடிகர்கள் செலவழிச்சிருப்பாங்களானு கேட்டா சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனா, ரெண்டு பேரும் பிறந்த பிறகு நான் படம் பண்றதையே குறைச்சுக்கிட்டேன். அப்போ ரஜினி வருஷத்துக்கு ஆறேழு படங்கள் பண்ணிட்டு இருந்தார். கையில நேரம் இல்லாம போயஸ் கார்டன் வீட்டு முன்னாடி ஜீப்-ல நின்னு சண்டைக் காட்சியில் நடிச்சிட்டு இருந்தார். அந்த வழியா நான் போனப்ப, ‘என்ன கமல் இந்தப் பக்கம்… ஷூட்டிங்கா?’னு கேட்டார். ‘இல்லை… சும்மா ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். இன்னும் 10 நாட்கள் ரெஸ்ட் இருக்கு’னு சொன்னேன். ‘பார்த்தீங்களா அவர் எவ்வளவு ஃப்ரீயா இருக்கார்?’னு இயக்குநரை முறைச்சார் ரஜினி. குடும்பத்தோடு இருக்கிறப்பவே நான் தனித்தும், புசித்தும், விழித்தும் இருக்கும் ஆள். இப்போ ஸ்ருதி, அக்ஷரா கால்ஷீட் கிடைக்கிறதும் கஷ்டமா இருக்கு. கொண்டாட்டத்துக்குக் கேட்கவா வேணும்!”
”தமிழ்நாட்டில் ‘தமிழக முதல்வர்’, ‘மக்கள் முதல்வர்’னு ரெண்டு பேர் இருக்காங்களே… அதைப் பத்தி உங்க கருத்து?”
”இன்னும் எத்தனை முதல்வர் வேணும்னாலும் வெச்சுக்கங்க. ஆனா, மக்களுக்கு நல்லது பண்ணுங்க. அது போதும் எனக்கு!”
நாடக வாழ்வியலை மையமாக வைத்து வசந்தபாலன் இயக்கும் படம் ‘காவியத் தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ் என்கிற இரண்டு நாடகக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் போட்டியும் போராட்டமும்தான் கதை.“எழுத்தாளர் ஜெயமோகன் எனக்கு அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலைக் கொடுத்தார். அதைப் படித்தபிறகுதான் இப்படியொரு பின்னணியில் படம் இயக்கவேண்டும் என்கிற எண்ணம் உருவானது” என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
சித்தார்த் மற்றும் பிருத்விராஜின் நாடக குருவாகவும், வாத்தியாராகவும் நாசர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம் பெறும் வேதிகாவின் கதாபாத்திரத்துக்கு கே.பி.சுந்தராம்பாளின் பாவனைகள் உதவியாக இருந்த தாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை யமைத்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் ‘பிரதிநாயகன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. – See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=4570&id1=41&issue=20141110#sthash.IWH7Egn4.dpuf
கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி
கூத்துக் கலைஞன், நடிகன் வேடங்களில் கமல் எப்படி இருப்பார்?
– எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது தமிழ் சினிமா. மகா கலைஞன் கமலோ, அனுபவமும் அபாரத் திறமையும் கொண்டு உருவாக்கிய ‘உத்தம வில்லனோ’டு காத்திருக்கிறார். ஏகத்துக்கும் அடுக்கிய புத்தகங்கள், கறுப்பு – வெள்ளையில் சிரிக்கிற ஈ.வெ.ரா… தியானக்கூடம் போலிருக்கிற கமலின் தனியறையில் நிகழ்ந்தது இந்த உரையாடல். வேறென்ன? கலா ரசனையும், சினிமாவின் மீதான காதலும், வாழ்க்கையின் மீதான பரிவுமாகக் கொட்டியது கமல் சாரல்!
‘‘அத்தனை கண்களும் எதிர்பார்க்கின்றன ‘உத்தம வில்லனை’… எப்படி வந்திருக்கு?’’
‘‘ ‘சர்வர் சுந்தரம்’, ‘புன்னகை மன்னன்’ மாதிரி உணர்ச்சிகரமாகவும், அதேநேரம் சந்தோஷமாக சிரிக்கக்கூடிய படமாகவும் இருக்கணும். சார்லி சாப்ளின், நாகேஷெல்லாம் மனசை உலுக்கவும் செய்திருக்காங்க; சிரிக்கவும் வச்சாங்க. நாங்க இதற்கு ‘பிட்டர் சாக்லெட்’னு பெயர் வச்சிருந்தோம். தமிழை சாகடிக்கிறேன்னு சொல்லிடுவாங்களோன்னு தயங்கினேன். அதான் தமிழில் ‘உத்தம வில்லன்’ ஆச்சு. ‘வில்லன்னா ஆங்கிலமாச்சே…
அதில் கொக்கி போடுவாங்களா’ன்னு படத்திலேயே ஒரு டயலாக் வருது. மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்யுத்தம் செய்பவன் வில்லன்னு வச்சிட்டோம். ‘இல்லை’ன்னு ஒரு தமிழ் வாத்தியார் சொல்லட்டும்… நான் குறிஞ்சியிலிருந்து பாட்டு எடுத்துக் காட்டுறேன்!
‘உத்தம வில்லன்’னா அது சிவனையும் குறிக்கும்… அர்ஜுனனையும் குறிக்கும். அப்படி ஒரு சின்ன உட்கருத்து இருக்கு. இதெல்லாம் டைட்டில் மட்டும்தான். ரொம்ப நாளா வேணும்னே அரங்கேறாமல் ஒதுங்கியே இருந்தார் கே.பாலசந்தர். என்னை அறிமுகப்படுத்தின பெருமை அவருக்கு இருக்கிற மாதிரி, அவரை அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்குத்தான் சேரணும்.
‘87 வயதுக்கு மேலே உள்ளவரை நடிக்க வைக்கிறீங்களே’ன்னு கேட்டாங்க. ‘எனக்கு நடிக்க வருமா’ன்னு சந்தேகப்பட்டு கேட்டபோது அவர் எப்படி நம்பிக்கையா சொன்னாரோ, அதையே நானும் சொன்னேன். அந்த நம்பிக்கை வீண் போகலை. இவரை விட ஆறு மாதம் பெரியவர் கே.விஸ்வநாத். பின்னி எடுத்திருக்கார்.
இது என் படம் விற்பனையாகணும், வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக… சில சினிமாக்கள்லதான் எல்லார் நடிப்பும் பிரமாதமா இருக்கும். சிவாஜி நடிச்ச ஒரு படத்தை சிறந்த படமா எடுத்துக்கிட்டா, அதுல சிவாஜியை அதட்டுகிற ஒரு போலீஸ்காரர் தப்பா நடிச்சிருப்பார். அது மாதிரி சின்னச் சின்ன தப்புகூட இல்லை. நாங்களே அப்படி இருக்கணும்னு வடிவமைச்சதால அப்படி வந்திருக்கு!’’‘‘கூத்துக் கலைஞராக சிரமமான நடிப்பை ஈஸியாக கொண்டு வந்திருக்கீங்கன்னு பேசுறாங்க…’’
‘‘ ‘தெய்யம்’னு ஒரு கலை இருக்கு. கேரளாவில் ரொம்ப மரியாதையா வச்சிருக்கற கலை இது. அந்தக் கலை கேரளாவோட நிக்கக் கூடாதுன்னு நான் நினைச்சேன். அது நம்ம கலைதான். சேர, சோழ, பாண்டிய நாடா இருந்தப்ப அது தமிழ்க் கலையாதான் இருந்திருக்கணும். ‘தெய்யம்’ நடனத்தையும், நம்ம வில்லுப்பாட்டையும் இதில் சேர்த்திருக்கோம். இந்த மாதிரி காம்பினேஷன் சினிமாவில்தான் சாத்தியம். அந்தக் காலத்தில் எந்த இரண்டையும் பண்டிதர்கள் சேர விடமாட்டாங்க.
இப்பத்தானே அஜய் சக்கரவர்த்தியும், எங்க வாத்தியார் பாலமுரளி கிருஷ்ணாவும் சேர்ந்து பாடுறது நடக்கிறது! இதில் புது நடன அமைப்பு வந்திருக்கு. நான் கூட அமைச்சிருக்கேன். டி.கே.சண்முகம் அண்ணாச்சி கம்பெனியில் இருந்தபோது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதை இந்த சினிமா பண்ணும்போது அனுபவிச்சேன்.’’
‘‘இதில் நீங்க நடிகராகவும் வர்றீங்க. அது நீங்களேவா… அல்லது சாயலா?’’
‘‘நான் கொலைகாரனா நடிச்சாலும் அதில் என் சாயல் இருக்கும். கொலை பண்ணுவது சரியில்லை, பண்ணக்கூடாதுன்னு இருக்கேன். இந்தப் படத்தில் வருகிற கமல்ஹாசனிலும் கமல்ஹாசன் சாயல் இருக்கு. நானும் என் வாழ்க்கையில் பல நேரங்களில் முட்டாளா இருந்திருக்கேன்; ஏமாளியா இருந்திருக்கேன். ஏமாளியா வர்ற கமல்ஹாசனில் என் சாயல் இருக்கும். நல்ல பாட்டு போட்டால் ‘கொன்னுட்டான்டா’ன்னு சொல்றோம் இல்லையா, அந்த மாதிரி வன்முறையும் நம்மகிட்ட இருக்கு.
ஆக, கொலைகாரனும் நம்ம கூட இருக்கான். சமூகநலன் கருதி, ‘இதுதான் நேர்மை; நன்மை’ன்னு நம்பிக்கிட்டு இருக்கிறதால அப்படியெல்லாம் செய்யறதில்லை. எல்லாரிடத்திலும் ஒரு ஸ்திரீலோலன் இருக்கான்; எல்லார் மனசிலும் ஒரு திருஞானசம்பந்தரும் இருக்கான். அதனால்தான் நம்மில் ஒருத்தரை ‘மகான்’னு நினைக்கிறோம். இது மட்டுமில்லை, என்னுடைய 210 படங்களுமே கொஞ்சம் கொஞ்சம் கமல்ஹாசனை நறுக்கிப் போட்டதுதான். பெருங்காயம் மாதிரி என்னுடைய சாயல் எல்லாத்திலும் இருக்கும்!’’
‘‘ஒரே நேரத்தில் மூணு படம்… ‘உத்தம வில்லன்’, ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’னு ரெடியாகி நிக்கிறது ஆச்சர்யம்…’’
‘‘அப்படிச் செய்ய வச்சிட்டாங்க. மூணுமே மூணு வித்தியாசமான படங்கள். ரா.கி.ரங்கராஜன் ஒரு பக்கம் ‘இது சத்தியம்’ எழுதுவார். நாலைந்து மாசம் கழிச்சு, ‘அடிமையின் காதல்’னு மோகினிங்கிற பேரில் எழுதுவார். அதற்கடுத்து வேறு மாதிரி துப்பறியும் நாவலில் வருவார். சுஜாதாவின் ‘காகிதச் சங்கிலி’யும், கணேஷ் வசந்த் கதையும், ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளும்’ வேறுவேறு மாதிரி தான் இருக்கும்.
‘விஸ்வரூபம் 2’… ‘விஸ்வரூப’த்தை விட உழைப்பு மும்மடங்கு. எனக்குத் தெரிஞ்சு அடக்கி வாசித்து பணிவுடன் சொன்னால், ‘விஸ்வரூபம் 2’ இரண்டு மடங்கு. ‘விஸ்வரூப’மெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றா மாதிரியிருக்கும். பொழுதுபோக்கு அம்சமும், வியத்தகு வீரச்செயல்களும் கதையோட்டமும் இன்னும் வேகம்.
‘பாபநாசம்’ பற்றி எல்லோருக்கும் தெரியும். மிட்டாய்க் கடையில கொஞ்சம் சாப்பிட்டு பார்த்திட்டு ‘எனக்கு ஒரு கிலோ கொடுங்க’ன்னு கேட்கிற மாதிரி இந்தப் படம். கேரளாவில் அதை சாப்பிட்டுப் பார்த்திட்டு பிடிச்சுப் போச்சு. நம்ம வீட்ல எப்படி ரசிக்கிறாங்கன்னு பார்க்கணும்!’’‘‘ஆபத்துகள் நிறைந்த சாகசங்களை ‘மருதநாயகம்’, ‘விஸ்வரூபம்’னு தேடிப் போய் செய்யறீங்க… பணம், முதலீடு, பிரச்னைகள் பற்றி பயமே கிடையாதா?’’
‘‘இது மாதிரி சேதாரம் வரும்னு தெரிஞ்சு போறது கிடையாது. ரோட்டை கிராஸ் பண்ணினா வலது பக்கமும் பார்த்திட்டு கிராஸ் பண்ணணும். ஏன்னா கீப் லெஃப்ட்… அதை மனசில் வச்சிக்கிட்டு லெஃப்ட்ல பார்த்துத் திரும்பினால் லாரி அடிச்சிடும். புறப்படும்போது லாரி அடிக்கும்னு நினைக்கிறதில்லை…
நினைக்காத நாளில்தான் லாரி அடிக்கும். தலை சிதறி, மூளை வெளியேறி விபத்து பார்த்திருந்தாலும், நாம் பஸ்ஸில்ஏறித்தான் ஆகணும். இந்த ரிஸ்க்கை பொதுமக்கள் எடுக்கும்போது, நான் எடுக்கிறதில் ஆச்சரியம் இல்லை. இந்த வாழ்விலிருந்து தொடர்ந்து உயிரோடு தப்பப் போவதில்லை. அப்புறமென்ன பயம்?’’
‘‘நிறைய படிக்கலை நீங்க… அதனால்தான் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்களா?
எப்போதும் புத்தகங்கள் ஊடே பயணம்… கிடைக்கிற மேதைமையில் இருக்கிற போதையா? தெரிஞ்சுக்கிட்டே ஆகணும் என்ற ஏக்கமா?’’
‘‘அந்தக் கதவுக்குப் பின்னாடி என்னன்னு ஆரம்பிச்சது… குழந்தையா இருந்தப்போ ‘அப்படின்னா’ன்னு கேட்கத் தொடங்கியது… ‘ஆகாயம் எவ்வளவு உயரம், அதுக்குப் பின்னாடி என்ன’ன்னு கேட்டது… இந்தக் கேள்விகள் இல்லாமல் நாமில்லை. அதுதான் கல்வி. அதைக் கேட்டுட்டு ஒரு கட்டத்தில் நிறுத்திடுறோம். கறுப்பு தொப்பி போட்டுட்டு, அதில் குஞ்சம் தொங்குமே, அதை வச்சுக்கிட்டு கையில் ஒரு பேப்பரை சுருட்டிக் கொடுத்ததும் படிப்பு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிற மனுஷன் படிக்கவே வேண்டாம்.
அது சம்பளம் வாங்குவதற்கான ஒருவித டிக்கெட். அது ஒரு ஸ்டேஷன் வரையில்தான் போகும். நான் அந்த மடையனா இருக்க விரும்பலை. கூகுள் வந்த பின்னாடி எல்லோரும் கல்விமான் ஆகிட்டாங்க. கல்வி தொடர்ந்துக்கிட்டே இருக்கு. அந்த சந்தோஷம் இருக்கிற வரைக்கும் நாம் ரிட்டயர் ஆகலைன்னு அர்த்தம். ‘ஏன்’ங்கிற கேள்வி கேட்கத் தெரியலைன்னா, மனசுக்கு ‘பல்லு போச்சு’ன்னு அர்த்தம். இனி மெல்ல முடியாது. சவைச்சுதான் சாப்பிடணும்… பால்பவுடர்தான்!’’
‘‘ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்ன நினைச்சீங்க?’’
‘‘உங்களின் அடுத்த வாரிசு யார்?’’‘‘சினிமாவில் அறிவுக்கும் திறமைக்கும் முதலிடம் கிடைப்பதில்லையா?’’
கறுப்பு தொப்பி போட்டுட்டு, அதில் குஞ்சம் தொங்குமே, அதை வச்சுக்கிட்டு கையில் ஒரு பேப்பரை சுருட்டிக் கொடுத்ததும் படிப்பு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிற மனுஷன் படிக்கவே வேண்டாம். நான் அந்த மடையனா இருக்க விரும்பலை.
“அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்!”
கௌதம் சர்ப்ரைஸ்
ம.கா. செந்தில்குமார்
” ‘ஒரு வெள்ளிக் கொலுசுபோல
இந்தப் பூமி சிணுங்கும் கீழ…
அணியாத வைரம்போல
அந்த வானம் மினுங்கும் மேல…’
இப்படி ஒரு பாட்டுக்கு ஃபீல் பண்ணி, அஜித் சார் ஆடுவாருனு நீங்க கற்பனை பண்ணியிருப்பீங்களா? கவிஞர் தாமரையின் இந்த வரிகள் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. ‘இந்தப் பாடல், படத்தில் என் ஒட்டுமொத்த கேரக்டரையும் சொல்லுது கௌதம்’னு ரசிச்சு சிரிச்சார். நானும் அதான் சொல்றேன்… இது வழக்கமான அஜித் படம் இல்லை” – அவ்ளோ பெரிய கண்களால் சிரிக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அஜித்தின் 55-வது படத்தை மாஸ் கிளாசிக்காக இயக்கும் பூரிப்புடன் பேசத் தொடங்கினார்…
”சுருக்கமா சொல்லணும்னா, ஹீரோ தன் திருமண பந்தத்தில் அடியெடுத்துவைக்கும் 28-வது வயசுல ஆரம்பிச்சு, 38-வது வயசு வரைக்குமான 10 வருடப் பயணம்தான் படம். அதுக்கு மூணு, நாலு லுக் தேவைப்பட்டுச்சு. ‘கறுகறு முடி வேணும்… சால்ட் அண்டு பெப்பர் லுக் வேணும்’னு நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலை. ஆனா, ஸ்கிரிப்ட் கேட்டுட்டு அவரே அந்தந்த லுக்கில் வந்து ஆச்சர்யப்படுத்தினார். ஒரு ஆக்ஷன் ப்ளாக். அதுக்காக ஒரு மாசம் வொர்க் பண்ணிட்டு வந்து, ‘இது ஓ.கே-வா, ஓ.கே-வா?’னு கேட்டுக் கேட்டு திருப்தியான பிறகே ஷூட் வந்தார். வழக்கமா அஜித்தோடு டிராவல் பண்றவங்க, ‘இந்தப் படத்தில் ஒட்டுமொத்தமா நீங்க புதுசா இருக்கீங்க’னு சொன்னாங்களாம். அவரோட ரசிகர்களும் அதே ரியாக்ஷன் கொடுத்தா, இந்தப் படம் அடுத்தடுத்த பாகங்கள் போகும்!”
”அந்த அளவுக்கு அஜித்கிட்ட என்ன சேஞ்ச்-ஓவர் பண்ணீங்க?”
”இதுதான்னு நானா எதுவும் பண்ணச் சொல்லலை. ஆனா, ‘ஷூட்டிங் போகலாம்’னு முடிவு எடுத்த நாளில் இருந்து அவரே ஏதேதோ கத்துட்டிருந்தார். ‘நான் பாக்ஸிங் கத்துக்கிறேன் கௌதம்’னு ஒருநாள் சொன்னார். ‘ஸ்கிரிப்ட்ல அப்படி ஒரு மூட் இருக்கு. பயன்படும்’னு சொன்னேன். திடீர்னு பார்த்தா, ‘கிடார் கத்துட்டிருக்கேன். ஒரு பாட்டுல கிடார் வாசிச்சா நல்லா இருக்கும்ல’னு கேட்டார். ஆக்ஷன் ப்ளாக் போறதுக்கு முன்னாடி, ஜிம் போய் ஸ்லிம் ஆகி வந்தார். இது எதுவுமே படத்துக்குத் தேவைப்படலை. ஆனா, இருந்தா நல்லா இருக்கும்னு அவருக்கே தோணிருக்கு. என்ன பண்ணணுமோ, அதை பெர்ஃபெக்ட்டா பண்ணிட்டார்!”
”அனுஷ்கா-த்ரிஷா… ரெண்டு பேருமே சீனியர்ஸ். எப்படி செட் ஆனாங்க?”
”முதலில் அனுஷ்காவை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். அப்புறம் இன்னொரு கேரக்டருக்கு த்ரிஷா இருந்தா நல்லா இருக்கும்னு, அவங்ககிட்ட கேட்டேன். ‘ஏற்கெனவே அனுஷ்கா இருக்காங்களே… அவங்களைத் தாண்டி, எனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்?’னு கேட்டாங்க. நியாயமான கேள்வி. ஆனாலும், என் பதிலை எதிர்பார்க்காம, ‘நடிக்கிறேன்’னு சொன்னாங்க. த்ரிஷாவின் அந்தத் தயக்கத்தை அனுஷ்காகிட்ட சொன்னேன். ‘ஒண்ணும் பிரச்னை இல்லை கௌதம். நான் அவங்க ரோல் எடுத்துக்கிறேன்’னு சொன்னாங்க. இதை த்ரிஷாவிடம் சொன்னப்போ, ‘அவங்க இப்படிச் சொல்வாங்கனு எனக்குத் தெரியும். அனுஷ்கா மனசளவில் அவ்வளவு நல்லவங்க. எனக்குப் பிரச்னை இல்லை. நீங்க சொன்ன கேரக்டர்லயே நான் நடிக்கிறேன்’னாங்க. இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ஸ்பேஸ் கொடுக்கிற பொறுப்பு என் கையில். இதை அஜித்கிட்ட சொன்னா, ‘அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் சமாளிச்சிடுவீங்க’னு சிரிக்கிறார்!”
”அருண் விஜய்க்கு என்ன ரோல்?”
”படத்துல அவர் ரோல் ‘நல்லது பண்ணுமா, நெகட்டிவா இருக்குமா, அஜித்துக்கு நண்பனா..?’ எதுவும் கேட்காதீங்க. ஆனா, ஒரு ஹிட் ஹீரோவா பேர் வாங்கின பிறகு இப்படி ஒரு கேரக்டர் பண்ண அவர் ஒப்புக்கிட்டது பெரிய விஷயம். ‘உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கீங்க… தினமும் ஜிம்முக்குப் போகணும்னு உங்களைப் பார்க்கிறப்பலாம் தோணுது. யூ ஆர் மை மோட்டிவேஷன்’னு அருண்கிட்ட அஜித் சொன்னார். அந்த அளவுக்கு அருண் உடம்பை டோன் பண்ணிவெச்சிருக்கார். இப்போ ஷூட்டிங்ல ஆக்ஷன் போர்ஷனுக்கு முன்னாடி ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு டம்பிள்ஸ் தூக்கிட்டு இருக்காங்க!”
”ஓப்பனிங் ஸாங், பன்ச் லைன்… இதெல்லாம் சொன்னா அஜித் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே…”
”ஒரு விஷயம் க்ளியரா சொல்லிடுறேன். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனா, அவர் படத்தின் வழக்கமான விஷயங்கள் இதில் இருக்காது. ‘நல்ல ஸ்கிரிப்ட் கௌதம். எனக்காக சில விஷயங்கள் சேர்க்கணும்னு யோசிச்சு அதை டிஸ்டர்ப் பண்ண வேணாம்’னு அஜித் சொல்லிட்டே இருப்பார். அதனால, ஒரு நல்ல சினிமாங்கிற எதிர்பார்ப்போடு வந்தால் போதும். லாரி பறக்கும், மெஷின் கன் வெடிக்கும்னு நினைக்காதீங்க. அதெல்லாம் அவர் ஏற்கெனவே நிறையப் படங்களில் பண்ணிட்டார்.
சும்மா ஒரு சாம்பிள் சொல்றேனே… ஹீரோயின்கிட்ட பேசுறப்ப அஜித் இப்படிச் சொல்வார்… ‘ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளை எப்படி இருந்தாலும் ‘அழகு’னுதான் சொல்வாங்க. சிலசமயம் பொய்னு தெரிஞ்சும்கூட சொல்வாங்க. ஆனா, என் அம்மா அப்படிச் சொன்னது உண்மை’! – கமர்ஷியல் படத்துக்கு நடுவுல இப்படி ஏகப்பட்ட ரொமான்ஸ், எமோஷன்ஸ் இருக்கும்!”
”ஒரு இடைவேளைக்கு அப்புறம் கௌதம்- ஹாரிஸ்-தாமரைனு ஹிட் மியூசிக் கூட்டணி ஒண்ணுசேர்ந்திருக்கே?”
”அஞ்சு பாட்டு. ஒவ்வொண்ணும் ஆல்டைம் ஹிட்ஸா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கோம்.
‘மழை வரப்போகுது
துளிகளும் தூறுது…
நனையாமல் என்ன செய்வேன்?
மதுரமும் ஊறுது
மலர்வனம் மூடுது…
தொலையாமல் எங்கே போவேன்..?’ இப்படிலாம் போகும் மெலடி டூயட்!”
”நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா அஜித் மெட்டீரியல் இல்லாத, ஒரு அஜித் சினிமானு தோணுது. இதுல எப்படி அவரை கமிட் பண்ணீங்க?”
”முழுக் கதையும் சொல்லாமல்தான்! என் ஸ்கிரிப்ட்வொர்க் கொஞ்சம் வித்தியாசம். ‘மின்னலே’ தொடங்கி ‘நீதானே என் பொன்வசந்தம்’ வரை ஸ்க்ரிப்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிச்சிருவேன். ஆனா, கிளைமாக்ஸ் மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்க மாட்டேன். ஷூட்டிங் போயிருவோம். ஆனா, கிளைமாக்ஸ் நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். ஷூட்டிங் போகப் போக ஆர்ட்டிஸ்ட்டின் ஈடுபாடு, காட்சிகளின் மேக்கிங் எல்லாம் சேர்ந்து ஒரு கிளைமாக்ஸை மனசுல ஃபிக்ஸ் பண்ணும். அதை கடைசியா ஷூட் பண்ணுவேன். ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’னு என் எல்லா படங்களுக்கும் இந்த ஃபார்முலாதான்.
அப்படி அஜித் சாருக்கும் இந்தப் பட கிளைமாக்ஸ் இன்னும் தெரியாது. அது இல்லாமல்தான் அவருக்கு கதை சொன்னேன். ‘முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதி அரை மணி நேரமும் பிரமாதம். ஷூட்டிங் போயிடலாம்’னு படத்துக்குள்ள வந்துட்டார். ‘ஜி… இன்னும் நீங்க கிளைமாக்ஸ் சொல்லலை. அவ்வளவு ரகசியமா வெச்சிருக்கீங்களா?’னு இப்பக்கூட அஜித் சார் கேட்டார். சீக்கிரம் அவர்கிட்ட கிளைமாக்ஸ் சொல்லணும்!” – அட்டகாசமாகச் சிரிக்கிறார் கௌதம்.